எம்.வை.அமீர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீனுக்கும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் எம்.முகைடீன்வாவாவுக்கும் இடையே 2016-07-13 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக முகைடீன்வாவா தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின்போது அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது முகைடீன்வாவாவினால் அவரது கட்சியின் கொள்கையில் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவது மற்றும் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஏற்றவாறு பிரதேசத்தை நவீனப்படுத்துவது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.
ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் திட்டங்களை வரவேற்ற அமைச்சர் றிஷாத் பதியூதீன், இத்திட்டங்களை அமுல்படுத்த தன்னாலான முயச்சிகளை செய்வதாகவும் அதற்கு தன்னுடன் இணைந்து செயற்படுமாறும் அழைப்புவிடுத்தார். இங்கு கருத்துத்தெரிவித்த முகைடீன்வாவா, எதிர்காலத்தில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அமைச்சருடன் இணைந்து செயற்படுவதாக உறுதியளித்தத்துடன் அதற்கான வேலைத்திட்டங்களையும் தயார் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.