எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் போன்றவற்றைத் திருடிய ஒருவரை இம்மாதம் 22 ஆம் திகாதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க ஞாயிற்றுக்கிழமை (10) உத்தரவிட்டார்.
கந்தளாய் நகரில் அமைந்துள்ள சில்லறைக் கடையொன்றினை உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பணமும் அலைபேசிகளின் மீள்நிரப்பு அட்டைகளும் திருடப்பட்டதாக கடை உரிமையாளரால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் சனிக்கிழமை (9)கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபருக்கெதிராக மற்றொரு திருட்டு வழக்கும் நீதிமன்றில் தொடரப்பட்டிருப்பதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.