மக்களின் தேவைகளை அவர்களது காலடிக்குச் சென்று நிறைவேற்றும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் பலவிதமான செயற்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (12) கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சித் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் சபீக் ராஜாப்தீன், செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா, அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நயீமுல்லாஹ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ காதிர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இதன்போது இரண்டு முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் முதலாவதாக,
ஒவ்வொரு கிழமையும் 3 நாட்கள் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக 6 மாதங்கள் நாடு முழுவதிலும் முஸ்லிம் காங்கிரஸினால் நடமாடும் சேவைகளை மேற்கொள்வதற்காக ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளது.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சும், கட்சியின் பிரதி அமைச்சர்களான பைசல் காசிமின் சுகாதார அமைச்சும், எச்.எம்.எம்.ஹரீஸின் விளையாட்டுத்துறை அமைச்சும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்களும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் ஏனைய சில அரச நிறுவனம்களும் இணைந்து இந்த சேவைகளை வழங்க முன்வந்துள்ளன.
அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேசிய தலைவரின் அமைச்சின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வைத்திய நிபுணர்களின் பங்குபற்றலுடன் பல்வேறு பிரதேசங்களில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Plastic Surgery) மற்றும் கண் அறுவை சிகிச்சை (Eye Surgery) ஆகிய மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ் மருத்துவ முகாம்களின் ஊடாக பல இலட்சம் ரூபா பெறுமதியான அறுவை சிகிச்சை சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.