ஏ.எஸ்.எம்.தாணீஸ்,என்.எம்.எம்.புஹாரி-
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் உப்பூரல் பகுதியில் வைத்து 20 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களினால் தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த நால்வர் மண்வெட்டி மற்றும் தடிகளால் தாக்கப்பட்டு இருவர் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவர் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று 16 காலை 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளானவர்கள் தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீது நஜிமுதீன் (57) நஜிமுதீன் இர்சாத் (20) நூறு முஹம்மது குபைபுல்லாஹ்(45) ஏ.எம்.சிராஜிதீன் (58) என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து படுகாயங்களுக்குள்ளான நஜிமுதீன் இர்சாத் வயது (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நாங்கள் எங்களது காணிகளை இன்று காலை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது 20 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் வந்து இக்காணியை துப்பரவு செய்ய வேண்டாமென தெரிவித்ததனர்.
அதற்கு நாங்கள் இக்காணி எங்களது மூத்த வாப்பாவினது காணி அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றதென தெரிவித்தோம். அந்த கதையினை செவிமடுக்காத அக்குழு எங்களை கொடூரமாக தாக்கியதாக தெரிவித்தார். அத்தோடு இத்தாக்குதல் நடாத்துவதற்கு உப்பூரல் கிராம சேவை அதிகாரி அக்குழுவுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து தோப்பூர் பிரதேசம் முழுவதும் பதற்ற நிலமை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.