அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சடடத்தரணி எம்.நிஸாம் காரியப்பரினால் முன்மொழியப்பட்டு, நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஒதுக்கீடு செய்யப்படட கல்முனை மாநகர சபையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியொதுக்கீட்டுக்கு திறைசேரி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பான உயர்மடடக் கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணி தொடக்கம் மாநகர முதல்வர் செயலகத்தில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது..
இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்டிருந்த கல்முனை மாநகர சபையின் 08 அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சுக்கான இவ்வருட பட்ஜெட் நிதியிலிருந்து 14 கோடி என்பது இலட்சம் ரூபாவையும் சாய்ந்தமருது தோணாவை நவீனமயப்படுத்தும் திடடத்திற்கு சுமார் 10 கோடி ரூபாவையும் ஒதுக்கீடு செய்து கடந்த மே மாதம் 31ஆம் திகதி திறைசேரிக்கு அறிவித்திருந்தார். அதனை கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை திறைசேரி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்முனை மாநகர சபையின் அபிவிருத்தி திட்டங்களுள் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்திக்கு இரண்டு கோடி அறுபது இலட்சம் ரூபாவும் கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலக அபிவிருத்திக்கு இரண்டு கோடி 25 இலட்சம் ரூபாவும் கல்முனை சந்தாங்க்கேணி விளையாட்டு மாகாணத்தின் பார்வையாளர் அரங்கின் இரண்டாம் கடட நிர்மாணப் பணிக்கு ஒரு கோடி எழுபது இலட்சம் ரூபாவும் மருதமுனையில் மாநாட்டு மண்டபம் ஒன்றை அமைப்பதற்காக ஐந்து கோடி 90 இலட்சம் ரூபாவும் நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒரு கோடி ரூபாவும் சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக வைத்திய நிலையங்கள் அமைப்பதற்கு தலா 45 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.
அதேவேளை கல்முனை மாநகர பிராந்தியத்தின் வெள்ள அபாய பாதுகாப்பு திட்டத்திற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கிடைத்ததும் அதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.