அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள போதும் மட்டக்களப்பில் அமைந்துள்ள விகாரைக்கு அழைத்தும் செல்ல மறுத்ததை கண்டித்து மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டியே சுமணரட்ன தேரர் தலைமையில் ஊடக சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அம்பிட்டியே சுமணரட்ன தேரர்,
“ஜனாதிபதி 3 தடவைகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தும் 3 தடவையும் விகாரைக்கு வருவதற்கு விரும்பவில்லை. இங்கு மொத்தம் 3 விகாரைகள் உள்ளன. இதில் ஒன்றுக்காவது வரமறுத்தது ஏன்?
பள்ளிவாசலுக்கு செல்ல முடியும், ஆலயங்களுக்கு செல்ல முடியும் என்றால் ஏன் விகாரைக்கு அழைப்பு விடுத்தும் வர மறுத்தது என்று எனக்கும் தெரியும், அதுபோல ஜனாதிபதிக்கும் தெரியும் என நினைக்கின்றேன்.
இங்கு யுத்த காலம் முதல் இனபேதம், மத பேதமின்றி நான் தனியாளாக இருக்கின்றேன். ஆனால் எனது அழைப்புக்கு செவி சாய்க்காதது வேதனைக்குரிய விடயமாகும், இதற்கான காரணம் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நான் சேதப்படுத்திய காட்சியை சில சர்வதேச ஊடகங்கள் தவறான பாதைக்கு கொண்டு சென்றுள்ளன.
அது உண்மை இல்லை. இங்குள்ள சிங்கள மக்கள் எதிர் நோக்கும் பாரிய விடயங்கள் தொடர்பாக பேச விரும்பிய எனக்கு ஜனாதிபதியின் இந்த புறக்கணிப்பு என்னை கல்வெட்டை சேதப்படுத்தும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
நான் விவாதிக்க தயாராக உள்ளேன், முடிந்தால் என்னுடன் விவாதிக்க வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கின்றேன். இன்று நான் இங்கு இருப்பதற்கு எத்தனை உயிர் தியாகங்கள் இடம்பெற்றுள்ளது என்பது எனக்குத்தான் தெரியும்.
அன்பான ஊடக நண்பர்களே நீங்கள் என்னை தப்பானவனாக சித்தரிக்க வேண்டாம். எனது உயிரை விட்டாவது நான் யார் என்பதை ஜனாதிபதிக்கு காட்டுவேன்” என்று தேரர் கண்ணீர்ருடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது