6-07-2016 அன்றைய அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக “முஸ்லிம் சிங்கள மக்களை மீளக்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி” உருவாக்கப்பட்டுள்ளது, அதிலே அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன், றிஷாத் பதியுத்தீன், பைசர் முஸ்தபா ஆகியோர் இணைத்தலைவர்களாக செயற்பட ஏனைய அதிகாரிகள் பலரும் இச்செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள், மேற்படி செயலணி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கியதாக தனது செயற்திட்டத்தை முன்னெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி செயலணி தொடர்பில் வடக்கு மாகாணசபையின் கரிசனை பெற்றுக்கொள்ளப்படவில்லை என்று காரணம் காட்டி இன்று (21-7-2016) வடக்கு மாகாணசபையில் கௌரவ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கவனயீர்ப்புத் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது.
இத்தீர்மானம் குறித்து மாகாணசபையில் பல்வேறு கருத்துப்பறிமாற்றங்கள் முன்வைக்கப்பட்டன; இங்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய கௌரவ.அ.அஸ்மின் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.
மாகாணசபை விவகாரங்களில் மத்திய அரசு தலையீடு செய்தல் என்பது கண்டனத்திற்குரிய விடயமே; ஆனால் மீள்குடியேற்றம் மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டதா அல்லது மாகாணசபையின் அதிகாரத்தைக் கொண்டதா என்று அறியவேண்டியுள்ளது. மாகாண அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்றாக இருப்பின் அதில் மத்திய அரசு தலையீடு செய்வதை அங்கீகரிக்க முடியாது; இவ்விடயத்தில் மேலதிக கருத்துக்களை முன்வைப்பதை விடவும் என்னிடம் இருக்கின்ற இரண்டு கேள்விகளை முதலமைச்சரை நோக்கி முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் கபினட் அந்தஸ்த்துள்ள ஒருவரே; ஏன் தாங்கள் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற அமைச்சரவையிற்கு சமூகமளிப்பதில்லை, அல்லது அங்கு உங்களுக்கு இருக்கும் மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதில்லை, இதனை அமைச்சரவையில் கதைத்துத் தீர்ப்பது நல்லதுதானே, இதனை மாகாணசபைக்குக் கொண்டுவருவதைவிடவும் அமைச்சரவை மட்டத்திலே கையாள்வதுதானே சிறப்பானது.
அடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தலைமையில் மீள்குடியேற்றம் குறித்த ஒரு விஷேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது, அக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்து எங்களுடைய அமைச்சர் ப.சத்தியலிங்கம் பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்; அதற்கு ஜனாதிபதியிடமும் வரவேற்பு இருந்தது, ஒரு சில விடயங்களை உள்ளடக்கில் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியும் பணித்திருந்தார்; நாமும் மாவட்டரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம், ஆனால் அவற்றில் தொடர் முன்னேற்றங்கள் நிகழந்ததாக அறிய முடியவில்லை, அவ்வாறான முன்னேற்றங்கள் குறித்து சபையில் பிரஸ்தாபிக்க முடியுமா? ஏனெனில் எமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை வாய்ப்பை நாம் பயன்படுத்தியிருக்கின்றோமா என்பதை முதலில் அறிந்துகொண்டதன் பின்னர்தான் நாம் இவ்வாறான கவனியீருப்புகளை மேற்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன். என்று குறிப்பிட்டார்
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் அவர்கள் நாங்கள் அமைச்சரவைக்கு விருந்தாளிகளாகவே அழைக்கப்படுகின்றோம், எங்களிடம் எவ்விதமான கருத்துக்களையும் கோருவதில்லை, ஏதாவது பாதிப்புகள் இருக்கின்றவா என்று கேட்பார்கள் அப்போதுதான் நாம் ஏதாவது செய்ய முடியும், எனவே இவற்றை அமைச்சரவையில் பேச எமக்கு சந்தர்ப்பமில்லை என்றாலும் இதனை அமைச்சரவையில் பிரஸ்தாபிக்க நான் உத்தேசித்திருக்கின்றேன் என்றார்.
தகவல்: என்.எம்.அப்துல்லாஹ்.