பிரதமர் ரணிலை நித்திரையால் தட்டி எழுப்பிய பஷீர்!..

மத தீவிரவாதத்தை உடனடியாக களைய நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடிதம் மூலம் கோரி உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத்.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள விடயங்கள் வருமாறு:-

மத தீவிரவாதத்தை உடனடியாக களைந்தெறிவது நாட்டின் பாதுகாப்புக்கும், ஸ்திர தன்மைக்கும் மிகவும் அவசியமானதாகும் என்பதில் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நம்புகின்றேன்.

2013 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இருந்து நமது நாட்டில் முன்பொருபோதும் இல்லாத வடிவத்தில் முஸ்லிம் மக்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிராக மத தீவிரவாதமும், வெறுப்பு பிரசாரமும் முடுக்கி விடப்பட்டு இருந்தன. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு இந்த தீவிரவாத நடவடிக்கைகள் சற்று ஓய்ந்தன போல் தோன்றினாலும் இப்போது மீண்டும் மெதுவாக முளையிட்டு ஓங்கி வளர்ந்து வருவதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.

முந்திய அரசாங்கத்தின் பிந்திய காலத்தில் துளிர் விட்ட முஸ்லிம் மக்களுக்கு எதிரான மேற்சொன்ன திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை முன்வைத்தே அரங்கேற்றப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு காலம் காலமாக இருந்து வந்த முஸ்லிம் மொத்த வாக்குகளில் முப்பது வீத வாக்கு வங்கி குறுகிய காலத்துக்குள் மாற்றப்பட்டு அக்கட்சிக்கு முஸ்லிம் ஆதரவு தளத்தை இல்லாது ஒழிப்பதற்கு இத்தீவிரவாத செயற்பாடுகள் காரணமாக அமைந்தன. ஆகவே கடந்த ஆட்சி மாற்றத்துக்கான அடிக்கல்லாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கான தோற்றுவாயாகவும் தம்புள்ளை பள்ளிவாசல் மீதான மத தீவிரவாத தாக்குதலும், நெருக்கடியும் அமைந்திருந்தன. உங்கள் கட்சியும், இன்னும் பல கட்சிகளும் விரும்பிய ஆட்சி மாற்றம் இதன் நிமித்தம் நிறைவேறி விட்டது. ஆனால் தம்புள்ளை பள்ளிவாசலின் உண்மையான நெருக்கடி இன்னும் தீரவுமில்லை, இதை தொடர்ந்து நிகழ்ந்தேறிய முஸ்லிம் மஸ்ஜிதுகள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரமும் இன்னும் முடிவுக்கு வந்தபாடும் இல்லை.

இலங்கையின் பெரிய மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறிய குழுக்கள் முன்னெடுக்கின்ற சிறுபான்மை மதம் ஒன்றுக்கு எதிரான திட்டமிடப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகள் சிறுபான்மை மத தீவிரவாதத்தை நமது நாட்டுக்குள் வலிந்து வரவழைக்க விரும்பும் சக்திகளின் முகவர்களாக செயற்படுவோரின் முயற்சியாகக்கூட வாய்ப்புள்ளது என்பதை நாம் மறுதலிக்க முடியாது.

இலங்கை மக்கள் அனைவரும் இனப் பிரச்சினையின் விளைவான மூன்று தசாப்த கால நிம்மதியான வாழ்வையும், உயிர்களையும், உடைமைகளையும், நாட்டின் பொருளாதார வளங்களையும் இழந்த அனுபவத்தை கொண்டவர்கள் ஆவர். இவ்வினப் பிரச்சினையின் தோற்றுவாயையும், காரணிகளையும் நன்கு உணர்ந்த இன்றைய பரம்பரை இன்னும் ஒரு பாரிய தவறை இழைக்க அனுமதிக்காது என்கிற நம்பிக்கை உள்ளபோதும் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும், அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இவ்விடயத்தில் இருக்கும் கடமையும், கரிசனையும் சாதாரண பொதுமக்களையும், சிவில் சமூக பிரமுகர்களையும், மத தலைவர்களையும் விட அதிகமானது என்பதை அழுத்தி உரைக்க விரும்புகின்றேன்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும், தீவிரவாத நடவடிக்கைகளும் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டதை அனுபவப் பாடமாக பெற்று கொண்ட சக்திகள் மீண்டும் இத்தீவிரவாதத்தை தூண்டி விட்டிருப்பதை ஏதோவொரு இலக்கை நோக்கிய வியூகமாகவே பார்க்க வேண்டி உள்ளது.

முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் முப்பது வீத வாக்கு வங்கி இலங்கையின் தேர்தல் அரசியலில் அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்கிற படிப்பினையை எதிர்காலத்திலும் செல்லுபடியாக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக சந்தேகிக்க வேண்டி உள்ளது.

அதாவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருந்த இச்சிறு தொகை முஸ்லிம் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடித்து பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைத்தமையை போன்று எதிர்கால தேர்தல்களில் இக்குறிப்பிட்ட வாக்குகளை அளிக்கப்படாத வாக்குகளாக மாற்றினால் நாட்டில் ஸ்திரம் அற்ற அரசியல் சூழ்நிலையையும், நாட்டு நிர்வாகத்தில் குழப்பகரமான நிலைவரத்தையும், பொருளாதாரத்தில் பாரிய இறக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்று தேச பற்றாளர்கள் போல நடிக்கின்ற தீவிரவாதிகள் நம்புவதாக தெரிகிறது.

கடந்த அரசாங்கத்திலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் பாதுகாப்பில்லை, நல்லாட்சியிலும் இதே சூழ்நிலை நிலவுகின்றது, எனவே எக்கட்சிக்கும் வாக்களிக்க முடியாது என்று மேற்சொன்ன முப்பது சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் மாத்திரம் அல்ல இளம் முஸ்லிம் வாக்காளர்களும் நினைத்து விட்டால் பெருந்தொகையான முஸ்லிம் வாக்குகள் அளிக்கப்படாமல் அல்லது செல்லுபடியற்றதாக செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே கூறி வைக்க விரும்புகின்றேன். 

இந்நிலைமை சமுதாயம் என்கிற வகையில் முஸ்லிம்களையும், கட்சி என்கிற வகையில் ஐக்கிய தேசிய கட்சியையும் வெகுவாக பாதிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் நாட்டின் பிரதமர் என்கிற அடிப்படையிலும், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே முஸ்லிம்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று வந்திருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்பதாலும், ஓர் அறிவுஜீவி என்கிற தகுதி அடிப்படையிலும் மதத் தீவிரவாதத்தின் குணாம்சங்களை கணக்கிட்டு நமது நாட்டின் ஸ்திர தன்மைக்கும், பாதுகாப்புக்கும், சுபீட்சத்துக்கும், உங்கள் கட்சியின் எதிர்கால நலனுக்கும், இலங்கை மக்களுக்கும் பாரிய குந்தகத்தை விளைவிக்க வல்ல மத தீவிரவாத செயற்பாடுகளை அடியோடு களைந்தெறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -