புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பவற்றினால் வரும் வருமானத்தினால் மாத்திரமே திறைசேரியின் பொருளாதாரத்தை பலப்படுத்தலாம் என்ற கொள்கைக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எமது நாட்டின் திறைசேரி வருமானத்தை எடுத்து நோக்கினால் சிகரட் மூலம் வருடத்துக்கு 55 பில்லின் ரூபா கிடைக்கின்றது. மதுசாரம் போன்ற போதைப் பொருட்களினால் 60 பில்லியன் வருடாந்த வருமானமாக வருகின்றது.
இவ்வாறு இந்த போதைப் பொருளின் வருமானத்தினால் தான் திறைசேரியைப் பலப்படுத்தலாம் என்ற கொள்கையில் காணப்படும் திறைசேரி அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் கருத்துக்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன்.
உடனடியாக, மதுவையும், சிகரட்டையும் நீக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தால், இதற்கு அடிமையானவர்கள் அடுத்த நாள் பாதையில் இறங்கி அரசாங்கதையும் மாற்றிவிடுவார்கள். இதனை செய்வதற்கு ஒரு முறையான முறைமையொன்று தேவை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை மது ஒழிப்புச் சபையின் 104 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு பி.எம்.ஐ.சி.எச். இல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.