என்.எம்.அப்துல்லாஹ்-
மன்னார் கல்வி வலயத்தின் முசலி கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை இன்று 27-7-2016 அன்று முசலி சிலாவத்துறை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் சந்தித்து உரையாடியபோது வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய அஸ்மின் அய்யூப் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். தன்னுடைய பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டில் முசலி கோட்டத்தில் 15 முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவப் பாடசாலைகளுக்கான செயற்திட்டங்கள் குறித்து பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அங்கு கருத்துத் தெரிவித்த வ.மா.சபை உறுப்பினர் அவர்கள்
முசலி பிரதேசம் முற்றாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும், இங்கிருந்த முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள், தமிழ் மக்களின் கிராமங்களை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். பாரிய அழிவுகள் இங்கு இடம்பெற்றுள்ளன, இன்னமும் இராணுவ ஆதிக்கம் தொடர்ந்தவண்ணமேயிருக்கின்றது. இந்த நிலைமையினை மாற்றியமைக்கவேண்டும். மீள்குடியேற்றத்தை மேம்படுத்த வேண்டுமென்றால் மீள்குடியேற்றத்தை வீட்டுத்திட்டங்களோடும், காணிப்பகிர்வுகளோடும் மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. மீள்குடியேற்றம் என்பது ஒரு முழுமையான சமூக நிர்மானத்துக்கான செயற்திட்டமாகும்.
காணி, வீடமைப்பு போன்றவிடயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற அதேசந்தர்ப்பத்தில் தொழில்வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகளை மேமப்டுத்தல் போன்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்தல் அவசியமாகும். குறிப்பாக முசலில் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன், ஆனால் இங்கு நிலவுகின்ற அதீத அரசியல் அழுத்தங்களால் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்த முடியாமல் இருக்கின்றது. முசலி பிரதேசத்திற்கான விஷேட கல்வி செயற்திட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு விஷேட சந்திப்பொன்றினை கல்வியியலாளர்கள், அதிகாரிகளை ஒன்றுதிரட்டி நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன், ஆனால் ஒரு சில அரசியல்வாதிகளால் குறித்த திட்டமிடல் அமர்வு பிற்போடப்பட்டது. இதுவிடயத்தில் நான் என்னால் முடியுமான முயற்சிகளை மேற்கொள்வேன். அதற்கு உங்கள் ஒத்துழைப்புகள் அவசியமாகும்.
இதில் அரசியலுக்கு இடமில்லை, நாம் அனைவரையும் அரவணைத்து செயற்படத் தயாராக இருக்கின்றோம். அதற்கான வாய்ப்புகளை என்னால் ஏறபடுத்த முடியும் உங்களது ஒத்துழைப்புகளை நான் எதிர்பார்க்கின்றேன், இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வடக்கு கல்வி அமைச்சு தன்னுடைய பங்களிப்புகளை நல்கும் என்றும் குறிப்பிட்டார்.
9இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தித்திட்டங்கள் முசலி கோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக இச்சந்திப்பில் பேசப்பட்டது.