ந.குகதர்சன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசத்தில் மூன்று விளையாட்டு மைதானங்கள் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
ஆரையம்பதி பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கென பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கும் வைபவம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் உரையாற்றுகையில்
கிராம மொன்றின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவது விளையாட்டு என்று கூறியதோடு எமது கிராமப் புறங்களிலேயே மிகவும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர் என்றும் அவர்களது திறமைகளை வெளிக்காட்ட பொருத்தமான முறைகளில் எமது பிரதேசங்களில் விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
அண்மையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்த போது அவருடன் வருகை தந்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசத்தில் மூன்று விளையாட்டு மைதானங்களை புனரமைத்து அபிவிருத்தி செய்ய ஏற்றுக் கொண்டதோடு மறு நாளே தனது அமைச்சின் பொறியியலாளரை மகிழடித்தீவு, நாவற்காடு, இலுப்பட்டிச்சேனை போன்ற இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு அனுப்பி ஆரம்ப கட்ட மதிப்பீடுகளை செய்தனர்.
இதன் பிரகாரம் இம் மூன்று மைதானங்களும் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. மேலும் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை பிரதேச மக்கள் யாவரும் இணைந்து அபிவிருத்தி செய்வதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு நகரப் பாடசாலைகளில் இடம் தேடி அலைவதை நிறுத்த முடியும் எனவும், எதிர்க்காலத் தேவை அதுவே எனவும், எதிர்காலத்தில் இப் பிரதேசத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் கலாசார செயற்பாடுகளை வலுவூட்ட தமது பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்;.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், அலுவலக உத்தியோகத்தர்கள்; மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்; என பலர் கலந்து கொண்டனர்.