மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாகும் வரையில் அரசாங்க பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணளிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மத்திய வங்கி பிணை முறி விற்பனையின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முழு அளவில் விடுதலையாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதனால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை வரையறுக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்த 12 பேர் அடங்கிய குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பேன். இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.