கல்முனைக்கு கிடைத்த ஐநூறு மில்லியன் ரூபாவில் நான்கு மாதத்துள் கல்முனை நவீனமடையும் என முஸ்லிம் காங்கிரஸ் சொல்வது அக்கட்சியின் ஆயிரத்தியோராவது ஏமாற்று நாடகமாக அமையாமல் உண்மையானதாக நடை பெறுகிறதா என்பதில் உலமா கட்சி அவதானமாக இருக்கும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனைக்கு கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் நிதி சமபந்தமாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் முபாறக் மௌலவி மேலும் தெரிவித்ததாவது
கல்முனையை பொறுத்தவரை 94ம் ஆண்டு முதல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசே கல்முனை உள்ளூராட்சி சபையை ஆட்சி செய்து வருகிறது. இருந்தும் இந்த இருபத்திரெண்டு வருட காலத்துள் கல்முனை மக்கள் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம். மக்களின் வரிப்பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டனவே தவிர மக்களுக்கான சேவைகள் நடக்கவில்லை.
எந்தளவுக்கு என்றால் கல்முனை சந்தையில் கழிவறை ஒன்றைக்கூட கல்முனையை ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் கட்டவில்லை. அதே போன்றே கல்முனை பஸ் நிலையமும் உள்ளது.
கடந்த மாநகர சபையில் கல்முனையின் மேயராக சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதன் மூலம் காணிகளை நிரப்ப சட்டப்படி நடவடிக்கை முடியும் என்று சொல்லி முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மக்களை ஏமாற்றியது. கடைசியில் சட்டத்தரணி மேயராக இருந்தும் எதுவும் நடக்கவில்லை.
அதே போல் சாய்ந்தமருதான் மேயரா கல்முனையான் மேயரா என்ற பிரதேசவாதத்தை கிளப்பி மக்களை ஏமாற்றி வென்ற முஸ்லிம் காங்கிரட் இந்த இரண்டு ஊர்களையும் ஏமாற்றியது தவிர வேறு பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.
தற்பொழுது கல்முனை அபிவிருத்திக்காக 600 மில்லியன் என்றும் 500 மில்லியன் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பால் ஒன்றுக்கின்று முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது தோணாவுக்கென 300 மில்லியன் கிடைத்துள்ளதாக கல்முனை முன்னாள் மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். அதேபோல் நான்கு மாதத்துள் கல்முனை நவீன அபிவிருத்தி பெறும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். ஐந்து வருடம் மாநகர ஆட்சியில் இருந்தும் கல்முனையை அபிவிருத்தி செய்யாதவர்கள் மாநகர சபை கலைக்கப்பட்டபின் அபிவிருத்தி செய்யப்போவதாக சொல்வது எம்மை பொறுத்தவரை கையாலாகாதவர்களின் கையில் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம்.
கடந்த காலத்திலும் கல்முனைக்கு கோடிக்கணக்கான நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் பொருளாதார அமைச்சர் முன்னூறு கோடி ரூபாய் கல்முனை அபிவிருத்திக்கென வழங்கினார்.
அதே போல் கல்முனை மாநகர சபை முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் மேயர்களினால் தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், ஜேர்மன் போன்றவற்றின் நகரங்களுடன் இணைக்கப்பட்டது. ஆனாலும் கல்முனை மாநகர சபை கட்டிடம் கூட சோமாலியாவின் மாநகர கட்டிடத்தை விட மோசமான நிலையில் உள்ளது.
ஆகவே, கல்முனையின் அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கியமைக்காக ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசை உலமா கட்சி பாராட்டுவதுடன் கல்முனை அபிவிருத்தி சம்பந்தமாக உலமா கட்சி தொடர்ந்தும் கவணிக்கும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.