பிரபல றக்பி வீரர் வசிம் தாஜூதீன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டி.வி காணொளிகள் பரிசோதனைக்காக, எதிர்வரும் 22ஆம் திகதி கனடாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது காணொளியின் தெளிவின்மை காரணமாக தீர்க்கமான முடிவினை மேற்கொள்ள முடியாத நிலையிலேயே குறித்த காணொளிகள், கனடாவில் அமைந்துள்ள கணினி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
குறித்த சி.சி.டி.வி காணொளிகளை, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அடங்கிய குழுவினர் கொண்டு செல்வவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், நாரஹேன்பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் எரிந்த நிலையில் அவருடைய காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அப்போது, இது விபத்து எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து, இது விபத்து அல்ல கொலை என குற்றப்புலனாய்வுப் பிரிவினார் குறிப்பிட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.