தென் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 33 உறுப்பினர்களில் 27 பேரும் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினரும் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் சமிலி விதானாச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தென் மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதாகவும், முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா தொடர்ந்தும் முதலமைச்சராக பதவி வகிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க வேண்டுமாயின் 14 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு மாத்திரம் போதுமானதல்ல.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் 5 உறுப்பினர்கள் அடுத்த வரவு செலவுத் திட்டம் அல்லது நிதி சட்டமூலம் போன்றவற்றை தாக்கல் செய்யும் போது அதனை எதிர்த்து வாக்களிக்கலாம் என்பதால், ஷான் விஜேலால் டி சில்வா தொடர்ந்தும் முதலமைச்சராக பதவி வகிக்க முடியாது போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியில் இருப்பதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கடுமையாக விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.