அண்மையில் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு ஒரு கோடியே எட்டு இலட்சம் ரூபாய் செலவில் அடிக்கல் நடப்பட்ட வைத்தியர்களுக்கான விடுதியினை நேற்று (08) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேரடியாக பார்வையிட சென்றிருந்தார்.
இதன்போது குறித்த கட்டட வேலைகளை அவதானித்த அவர் இவ்வேலைகளுக்காக உபயோகிக்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் அங்கு கட்டுமான பணிகளுக்காக பாவிக்கப்படும் கொங்றீட் கலவையினுடைய தரத்தினையும், வேலையினுடைய தரம் போன்ற சகல விடயங்களையும் அவதானித்ததுடன் அங்கு காணப்பட்ட சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் காத்தான்குடி வைத்தியசாலையின் திருத்த வேலைகளுக்காகவும் இரத்த வங்கி பிரிவினை அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்ட 67 இலட்சம் ரூபாய் நிதி செலவு செய்யப்படுகின்ற இடங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்னும் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இக்கட்டடப் பணிகள் அனைத்தையும் துரிதமாக நிறைவு செய்ய வேண்டிய அவசியத்தையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குறித்த கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு தெளிவுபடுத்தினார்.