2016 ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்முனை மற்றும் சம்மாந்துறை வலய முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணைப் பரிட்சை பொருத்தமில்லாத நேரத்தில் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புலமைப் பரிசில் பரிட்சைக்காக அல்லும் பகலும் வீட்டிலும் பாடசாலையிலும் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களிலும் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்ற இத்தருவாயில் இம்மாணவர்களினை தவணைப் பரிட்சை மூலம் (பல பாடங்களுக்கான) வேறு பாடங்கள் நோக்கி திசை திருப்ப முற்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இதனால் மாணவர்களின் சிந்தனை புலமைப் பரிசில் பரிட்சையினை விட்டும் தூரமாகிவிடும் என தெரிவிக்கின்றனர்.
பரிட்சைத் திணைக்களமே தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையினை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற கருத்தரங்குகள் உந்துதல் செயற்பாடுகளினை மாணவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 17 ம் திகதிக்கு பின்னர் நடாத்துவதற்கு தடை விதித்திருக்கின்றது. பரிட்சைத் திணைக்களமே மாணவர்களின் பரிட்சை மைய அழுத்தத்தினை குறைக்கும் வகையில் பரிட்சைக்கு 03 நாட்களுக்கு முன்னரே இத்தடை அமுலாகும் வகையில் சுற்று நிருபம் மூலம் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது.
ஆனால் குறிப்பாக கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று வலய முஸ்லிம் பாடசாலைகளில் பொருத்தமற்ற நேரத்தில் இரண்டாம் தவணைப்பரிட்சை நடாத்துவதால் புலமைப் பரிசில் பரிட்சையில் பின்னடைவு ஏற்படுமே தவிர வேறு எதனையும் சாதிக்கப்போவதில்லை. இம்முன்று வலயங்களினதும் திட்டமிடல் குறைபாடே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புலமைப் பரிசில் பரிட்சை முடிவடைந்ததன் பின்னர் பிறிதொரு நேரசூசிக்கு ஏற்ப இப்பரிட்சையினை நடாத்துவதற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுப்பது இவ்வலய மாணவர்களின் பரிட்சை வெற்றிக்கு வழிகோலுவதாக அமையும்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளர் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இதுவிடயத்தில் துரிதமாக செயற்பட்டு இக்கோரிக்கைக்கு நியாயம் பெற்றுத்தருமாறு பெற்றோர்கள் அதிகாரிகளை வேண்டி நிற்கின்றனர்.
க.பொ.த உயர்தர பரிட்சை நிலையங்களாக உபயோகிக்கப் படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கு இவ் இரண்டாம் தவணைப்பரிட்சை ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.