சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதமர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களே, ரிவிர பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோனை தாக்கியுள்ளனர்.
லசந்த கொலையுடன் தொடர்புடைய நபர்களே உபாலி தென்னக்கோனை தாக்கியுள்ளனர் என்பது ஐந்து தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கம்பஹா நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார முன்னிலையில் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதன்போது லசந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர், நேற்று கம்பஹா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தாக்குதலின் பின்னர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதுகாப்பு நோக்கத்திற்காக அமெரிக்காவிற்கு சென்று தங்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் என உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
வழக்கு விசாரணைகளுக்காக இலங்கை வந்து குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும் என உபாலி தென்னக்கோன் குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் எதிர்வரும் 22ம் திகதி அடையாள அணி வகுப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது.