கிழக்கு தனித்தே இருக்க வேண்டும் கல்முனையில் மாபெரும் பிரகடனம்!...

எம்.வை.அமீர்-

கிழக்குமாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் ஒன்றிணைத்த அமைப்பான கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் அவ்அமைப்பின் தலைவர், முன்னாள் கல்வி அதிகாரி அஷ்ஷேய்க்இசட்.எம்.நதீர் தலைமையில் கல்முனை ஆஸாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் 2016-08-07 ஆம் திகதியன்றுஒன்றுதிரண்ட அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட புத்திஜீவிகள் முன்னிலையிலேயே மேற்படி பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

FEMCO என்றழைக்கப்படும் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினூடாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவில் பின்வரும் விடயங்கள் சம்மந்தப்பட்ட நகல் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் தாம் சார்ந்த சமூகத்தின் சார்பாக காத்திரமான யாப்பு முன்மொழிவினை அரசுக்கு வழங்கி அதனை சமூகத்திற்கு பகிரங்கப்படுத்தாமையினால் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் கடந்த 8 மாதகாலமாக ஆராய்ந்து அம்முன்மொழிவினைத் தயாரித்து அரசுக்கும் வெளிநாட்டுத் தரப்பிற்கும் வழங்கி அது சம்பந்தமான பொதுமக்களுக்கு தெளிவூட்டும் மாநாட்டை நடாத்தியது.

இலங்கை முஸ்லிம்கள் தங்களது வாழ்விடம், மதம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக கட்டமைப்பு போன்ற பல்வேறு விடயங்களில் வரலாற்று ரீதியான தனித்துவத் தன்மையைக் கொண்டுள்ள ஒரு இனம் என்பது வரலாறு நெடுகிலும் உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இவ்வுண்மையினை அன்று வடக்கிலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டது முதல் இன்று தெற்கில் முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் இம்சிக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான உண்மையிலிருந்து அவ்விரு சமூகமும் எமது இனத்துவ தனித்துவத்தை அங்கீகரித்துள்ளமை தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கம் ஏற்று கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் முதலாவது உறுப்புரையில் சகலருக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனவே முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தனித்துவ அடையாளத்தைக் கொண்டுள்ளதாலும் சுயநிர்ணய உரித்துடையவர்களாக இருப்பதனாலும் அவர்களை ஒரு தேசியமாக உறுதிப்படுத்தப்படவேண்டியது தவிர்க்க முடியாததாகும்.

முஸ்லிம்களுக்கும் ஏனைய இரு இனத்தவர்களுக்குமிடையிலான நிலப்பங்கீட்டு சமமின்மை தொடருகிறது. இந்நிலைமை, முஸ்லிம்களிடமிருந்து யுத்தகாலப்பகுதிகளில் பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீள ஒப்படைக்கப்படாமையினால் மேலும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சாசன ஒப்பந்தங்களில் கூறப்பட்ட அபிவிருத்திக்கான சமஉரிமை சம சந்தர்ப்பம் சகலருக்கும் ஏற்புடையதாக உள்ளதாலும் 1993 ஜூலை 25ம் திகதி வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைக்கான உலக மகாநாட்டில் சிறுபாண்மையினத்தவர்களின் அபிவிருத்திக்கான உரிமை உட்பட சகல உரிமைகளையும் சமஅளவில் வழங்கவேண்டியதை உறுதிப்படுத்தி இலங்கை உட்பட பங்குபற்றிய 183 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளமையால் அபிவிருத்திக்குத் தேவையான நில உரிமை சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.

எனவே கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனிமாகாணம் தவிர்க்க முடியாத சூழலில் அமையுமாக இருந்தால் அது தற்போது உள்ள நிலத்தோடு இனவிகிதாசாரத்திற்கேற்ப அரச காணியும் பங்கிடப்பட்டு பறிக்கப்பட்ட காணிகளையும் மீள ஒப்படைக்கப் பட்டாலே அது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமாக அமையும்.

முஸ்லிம்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட உயிர் உடமை இழப்பிற்குரிய அடிப்படைக்காரணத்தின் அடிப்படையில் ஒற்றையாட்சி முறைமையே எமக்கு சாதகமானது எனவும் சமஷ்டி முறைமை தமக்கு ஆபத்தானது எனவும் கருதுகிறார்கள்.

மேலும் தற்போதய ஜனாதிபதி முறைமை தொடரவேண்டும் எனவும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தங்களது இனங்களின் விவகாரங்களுடன் தலையிடக்கூடிய அளவிற்கு அதிகாரமுடைய இரு உப ஜனாதிபதிகளும் அமைய வேண்டும் எனவும் கோருகின்றனர்.

சர்வதேசக் சட்டக் கொள்கை விளக்கங்களாகிய சமத்துவக்கொள்கையிலும் (Equality principle) சமூகநீதிக்கொள்கையிலும் (Social justice principle ) அரச வளங்கள்,சந்தர்ப்பங்கள் மற்றும் சலுகைகள் அநீதி இழைக்கப்படாமல் சகலருக்கும் சமமாக பகிர்ந்களிக்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச சட்டங்களையும் கோட்பாடுகளையும் ஆராய்ந்தால் அபிவிருத்தி, வீடு அமைத்தல்,; தரமான வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்தல் போன்றவற்றிற்கு தேவையான நில வளம் சமமாக இருந்தால்தான் சமத்துவமான அபிவிருத்தியில் ஈடுபடலாம். ஏனெனில் அபிவிருத்தி, வீடு கட்டுதல்,தரமான வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்தல் போன்றவற்றிற்கு நிலம் இன்றியமையாத ஒன்றாகும். ஆகவே முஸ்லிம் சமூகத்தின் நிலப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டியதானது எமது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சர்வதேச மனித உரிமை சாசனக் கோட்பாடுகளிலிருந்து தெளிவு பெறக்கூடியதாகவுள்ளது. . மேலும் சமூக பொருளாதார சமமின்மையை ஏற்படுத்தும் வகையில் வளப்பங்கீட்டில் இனங்களுக்கிடையிலோ தனிநபர்களுக்கிடையிலோ அரசு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என சர்வதேச மனித உரிமை சாசன விளக்கவுரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, அபிவிருத்திக்கான உரிமை யாப்பிலே அடிப்படை உரிமையாக எழுதப்பட்டு சமூகங்களுக்கிடையிலான சமனற்ற வள பங்கீட்டு நிலையை மாவட்ட ரீதியில் சமன்செய்து சகலருக்கும் சமத்துவமான அபிவிருத்திக்கான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட எழுதப்படவிருக்கும் யாப்பில் ஆவனை செய்யப்பட வேண்டும்.

அரச தொழில் நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது அந்நியமனங்கள் தேசியஇ மாகாணஇ மாவட்டஇ பிரதேச மட்டங்கள் போன்ற எம்மட்டங்கள் என்றாலும் அம்மட்டங்களிலான இன விகிதாசார அடிப்படையில் அந்நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பவில்லை. அவ்விணைப்பு கிழக்கு முஸ்லிம்களை சிறுபாண்மையாக்குவதுடன் இன அநீதிக்குள்ளாக்கப்படுவதற்கும் வழிகோலுகிறது.

தேர்தல் முறைமையில், எல்லா ஆளுகை மட்டங்களிலும் (பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றம்) முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்திற்கு குறைவில்லாத வகையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக எல்லை நிர்ணயத்தின் போது முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளின் மூலமும் பல் அங்கத்தவர் தொகுதிகளின் மூலமும் அல்லது மாற்று பொறிமுறை மூலமும் முஸ்லிம் பிரதிநிதிகளின் இனவிகிதாசார தெரிவுக்கான வாய்ப்பினை யாப்பில் உறுதிப்படுத்தல் வேண்டும்.

சிறுபாண்மை காப்பீடுகள்

சிறுபாண்மையினர், கடந்தகாலங்களில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல், மதவன்முறை போன்ற பிரச்சினைகளால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் சமத்துவமான உரிமைகளை தாங்களே உறுதிபடுத்திக்கொள்ளக்கூடிய வகையிலமைந்த ஒரு பொறிமுறையை புதிய யாப்பிலே உள்ளடக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

அதாவது ஒவ்வொரு மாகாண சபைக்கும் முதல் மற்றும் இரண்டாவது சிறுபாண்மையிலிருந்து முறையே ஒம்புட்ஸ்மன் மற்றும் பிரதி ஒம்புட்ஸ்மன் என இருவர் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் அந்த சிறுபாண்மை இன பாராளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை விருப்பத்துடன் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் துறைசார்ந்த அனுபவமுள்ள நிபுணர்களாக இருக்க வேண்டு;ம். இவர்களின் காரியாலயம் சட்டம் மற்றும் ஏனைய துறைகளில் கற்றறிந்தவர்களால் ஒம்புட்ஸ்மனின் விருப்பத்திற்கமைய நிரப்பப்பட்டு நிர்வகிக்கப்படும்.

மாகாண சபையிலுள்ள பெரும்பாண்மையின முதலமைச்சர் மற்றும் ஏனைய மாகாண அமைச்சர்களின் அநீதிகளுக்கோ அல்லது தீங்குகளுக்கோ சிறுபாண்மை இனம் ஆளாகாமல் தவிர்ந்து கொள்வதற்காகவே ஒம்புட்ஸ்மன், பிரதி ஒம்புட்ஸ்மன் மற்றும் காரியாலய அதிகாரிகள் இயங்குவார்கள். இவர்களின் பின்வரும் வகையிலமைந்த செயற்பாடுகளும் சட்ட வரைபுமுறைகளும் இப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

01. நிருவாக, சட்டவாக்க, நிறைவேற்று அதிகாரம் போன்ற மாகாண சபையின் தரவு மற்றும் விவகாரங்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்து சிறுபாண்மையினரின் இனவிகிதாசார பங்கீட்டிலோ அல்லது வேறு எந்த விடையத்திலோ அநீதிகள் ஏதும் ஏற்பட்டிருப்பின் அதனைத் திருத்தி மாகாண சபைக்கு ஒப்படைப்பர். இதனையே மாகாண சபையில் நிறைவேற்றம் செய்யமுடியும். இதில் பிணக்கு நிலை தோன்றுமாயின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி யாப்பிற்கமைய அரசியலமைப்பு நீதிமன்றம் இறுதியான தீர்வை வழங்கும்.

02. சிறுபாண்மையினருக்கு எதிராக அதிகாரத்துஷ்பிரயோகம், இனக்கலவர சூழலை ஏற்படுத்துதல் மற்றும் வன்முறையைத்துண்டுதல் போன்ற நிலைமைகள் ஏற்படும் போது அத்தகைய அவசரகால சூழ்நிலைகளில் நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், அத்தியவசிய சேவையை பராமரித்தல்,நீதி சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்ற அதிமுக்கிய உயர்நோக்கை அடைய, ஒம்புட்ஸ்மன் அவர்கள் சிரேஷ்ட பிரதி சட்டமா அதிபருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் முதலமைச்சரின் அதிகாரத்தை மீறி கட்டளை பிறப்பிக்கக் கூடிய அதிகாரம் யாப்பினால் வழங்கப்பட்டிருப்பார். இதன்மூலம் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். This is called derogable rights.. இத்தகைய அதிகாரத்தையும் உரிமையையும் மீறக்கூடிய அதிகார முறைமை வௌ;வேறு மட்டங்களில் சகல நாடுகளின் யாப்பிலும் உள்ளது.

03. ஓவ்வொரு பொலிஸ் நிலைய பிரிவிலும் இனவிகிதாசார அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகளும் உயர் பொலிஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.

04. முதலமைச்சருக்கோ அல்லது வேறு எந்த மாகாண அமைச்சருக்கோ அல்லது ஒம்புட்மன்களுக்கோ அவர்களின் சட்ட விரோத செயல்களுக்கெதிராக விசேட பாதுகாப்பு (Immunity)) எதுவும் வழங்கப்படக்கூடாது. அவ்வாறு வழங்கப்பட்டால் குற்றமிழைத்தவர்; தப்புவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். இந்நிலை அதிகார துஷ்பிரயோகத்திற்குத் தூண்டும்.

05. அநியாயம் மற்றும் அதிகாரத்துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கெதிராக எந்தப் பொதுமகன் விரும்பினாலும் சட்டத்தை நாடுவதற்கு பொதுநலன் சார்ந்த சட்டம் (Public Interest Litigation) இயற்றப்படவேண்டும். இவர்களுக்கான (சட்டத்தின் உதவியை நாடுபவர்களுக்கு) பாதுகாப்பையும் சட்டத்தில் உறுதி செய்யவேண்டும். (Victim and witness protection law in the name of “ Assistance to and protection of victims of crime and witness act No 4 of 2015 is in place in our law) மேலே சொல்லப்பட்ட சட்டம் குற்றமிழைக்கப்பட்டவருக்கும் சாட்சிக்கும் மட்டுமே பாதுகாப்பளிக்கும். பொது நலன் சார்ந்த சட்டத்தின்கீழ் உதாரணமாக தவறிழைத்த முதலமைச்சருக்கெதிராக ஒரு நபர் வழக்குதாக்கல் செய்தால் அவரை அச்சட்டம் பாதுகாக்காது. ஆகவே அவரையும் பாதுகாக்கும் விதத்தில் யாப்பும் சட்டமும் வரையப்பட வேண்டும்.

01. 06. குற்வவாளி என நிரூபிக்கப்படுபவரே முழு நஷ்டஈட்டினையும் குற்றமிழைக்கப்பட்டவருக்கு வழங்கவேண்டும். தற்போதய நிலையில் பொது சேவையிலுள்ளவர் தவறிழைத்து நிரூபிக்கப்பட்டால் அரசாங்கமே பெரும் பகுதி நட்டஈட்டு பணத்தை வழங்குகிறது. அவ்வாறு பாரிய தவறிழைத்த குற்றவாளிக்கு தண்டனையும் வழங்கப்படக் கூடிய வகையில் யாப்பும் சட்டமும் எழுதப்பட வேண்டும். ( Applicability of impunity amounting to punishable offence act shall be enacted )

07. தேசிய, மாகாண, மாவட்ட, பொலிஸ் பிரிவு பிரதேச வாரியான இன விகிதாசார முறை முடியுமான வரையில் நியமனம் வழங்கலிலோ அரச வளங்களை பங்கீடு செய்தலிலோ கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டுமென யாப்பிலே குறிப்பிடப்படல் வேண்டும்.

08. அவசரமான சட்டவாக்க தேவைகளின் போது சிறுபாண்மைக்கு தீங்கு ஏற்படும் வகையில் பாகுபாடான விடையங்கள் ஏதும் உள்ளடக்கப்படுமாயின் அதனைத்தடுத்து நிறுத்தக்கூடிய வீட்டோ அதிகாரம் ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கப்படும்.

09. சுயாதீன நில மற்றும் பொலிஸ் ஆணைக்குழுக்களில் முஸ்லிம் தமிழ் சிங்கள இனத்தவர்கள் சம எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும்.

10. ஓம்புட்ஸ்மன் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை (உதா: 3 மாதத்திற்கொருமுறை) இலங்கையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழு மத்திய அரசு மற்றும் ஊடகங்களுக்கு அவரது மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து மனித உரிமை ஆணைக்குழு அவ்வறிக்கையையும் உண்மையான சூழ்நிலையையும் ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

குறித்த நிகழ்வின்போது மூன்று மாவட்டங்களையும் பிரதிநித்துவப்படுத்தி உலமாக்கள் கல்வியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் புதிய அரசியலைமைப்பு திருத்தத்தின்போது முன்வைக்கப்படவேண்டிய கருத்துக்களையும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.











#பிரகடனம் #கல்முனை #கிழக்கு #தனித்தே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -