கஹட்டோவிட்ட ரிஹ்மி -
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக இருந்த தடல்லகே அவர்கள் ஓய்வூதியம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், பின்னர் அமைச்சின் புதிய செயலாளராக ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் நேற்று (04/08/2016) காலை வேளையில் கடமைகளைப் பொறுப்பேற்றார். 1984 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட இவர்கள், பிரதேச நிர்வாக சேவையில் 18 வருடங்கள் அனுபவம் கொண்டவர். இதற்கு முன்னர், மாகாண சபை உதவிச்செயலாளராக, தேசிய லொத்தர் சபையின் அதிகாரியாக, மின்சக்தி அமைச்சின் வலுச்சக்தி இயக்குனராக, சமுர்த்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக, மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களின் அரசாங்க அதிபராகப் பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன், அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளராகப் பதவியேற்க முன்னர், உள்ளூராட்சி மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு என்பவற்றின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். புதிய செயலாளர் பதவியேற்கும் நிகழ்வில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ பதில் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே உட்பட அமைச்சின் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.