ஜமிய்யதுல் உலமாவின் தலைமையில் ஜனாதிபதியை சந்தித்த சில முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன ரீதியிலான பாடசாலைகளை ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியுள்ளமை முஸ்லிம்களின் கல்விக்கும் தனித்துவமான கலாச்சரத்துக்கும் ஆப்பு வைக்கும் முயற்சியாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது;
முஸ்லிம் சமூகத்தின் முன்னோடி கல்விமான்கள் பாரிய போராட்டத்தை செய்து முஸ்லிம்களுக்கான தனி பாடசாலைகளை ஏற்படுத்தினார்கள். அவர்களது இந்த தூர நோக்கின் காரணமாக முஸ்லிம் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் தமது கலாசாரம், பண்பாட்டை பாதுகாத்துக்கொண்டு தமது கல்வியை தொடர முடிந்தது.
அது மட்டுமல்ல முஸ்லிம் பாடசாலைகள் என்று இருப்பதால் அவற்றுக்கென தனியான பௌதீக வளம், தனியான ஆசிரியர்கள், மத வழிபாடுகள் என் பல வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
இன ரீதியிலான பாடசாலைகள் இல்லாமலாக்கப்பட்டால் முழுக்க முழுக்க பாதிக்கப்படப்போவது முஸ்லிம் சமூகம் மட்டும்தான். காரணம் ஏனைய, சிங்கள, தமிழ் பாடசாலைகள் என்பன மொழி ரீதியிலான பாடசாலைகள் என்பதால் அவற்றை இல்லாமலாக்க முடியாது.
இந்த நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் ஒழிக்கப்பட்டு சிங்கள அல்லது தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் சேரும் நிர்ப்பந்தம் ஏற்படும். இது குளிக்கப்போய் சேறு பூசிக்கொள்ளும் முட்டாள்தனமான சிந்தனையாகும்.
சிலர் பல்கலைக்கழகங்களில் சகல இனத்தவர்களும் கல்வி கற்க முடியுமென்றால் ஏன் இது முடியாது என கேட்கின்றனர்.
பல்கலைக்கழக படிப்பு என்பது ஒருவர் இருபது வயதை தாண்டி ஓரளவு பக்குவ வயதின் பின் தொடரும் கல்வியாகும். அது கூட ஆபத்தாக உள்ள நிலையில் முஸ்லிம் பெண்களுக்கென தனியான பல்கலைக்கழகம் வேண்டுமென உலமா கட்சி கோரும் நிலையில் அப்பாவி சிறு வயது மாணவ மாணவியரின் பண்பாட்டை சிதைக்க முன்னெடுக்கும் யூத சிந்தனையே இந்த இனரீதியிலான பாடசாலைகள் ஒழிக்க வேண்டுமென்ற கருத்தாகும். இதனை உலமா சபையின் தலைமையில் ஜனாதிபதியை சந்தித்தவர்கள் முன் வைத்திருப்பது உலமாக்களை அவமானப்படுத்தும் செயலாகும். இக்கருத்துக்கு உலமா சபையின் தலைமையும் துணை போகின்றதா என்பதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.