முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முறையற்ற விதத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆட்சியின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவினால் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தவறான முறையில் பெற்றுகொண்ட பணத்தில் கொள்வனவு செய்த அனைத்து காணிகளையும் அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்ய அமைச்சரவை ஏகமனதான தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, மேலதிக பொலிஸ் பயிற்சி கல்லூரி ஒன்றை நிர்மாணிப்பதற்காக வனாந்திரமாக உள்ள பகுதியில் காணி ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பிற்கு அருகில், மல்வானை களனி கங்கை அருகில் உள்ள 16 ஏக்கரில் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமாக உள்ள இடம் கிடைத்தால் சிறப்பான இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த காணி கட்டான காணியை விடவும் விரைவில் மேலதிக பொலிஸ் பயிற்சி கல்லூரி நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் இந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையான ஆதரவை வழங்கியுள்ள நிலையில், இந்த காணிகள் மக்களை ஏமாற்றி பெற்றுக் கொண்டவைகள், உடனடியாக அந்த காணியை மேலதிக பொலிஸ் பயிற்சி கல்லூரி ஒன்றை நிர்மாணிப்பதற்காக பெற்று கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவைக்கு யோசனை ஒன்றை சமர்ப்பித்து, மாத்தறை பிரவுன்ஸ் ஹில்லில் உள்ள பசில் ராஜபக்சவின் மைத்துனர் மற்றும் சகோதரிக்கு சொந்தமான இடத்தை அரசாங்கத்திற்கு பறிமுகம் செய்து அங்கு ஹோட்டல் மற்றும் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றி கொள்வனவு செய்யப்பட்ட காணிகளை முடிந்த அளவு விரைவில் அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்ய வேண்டும் என ஜனாதிபதி பதிலளித்துள்ளார். அதற்கமைய இந்த இரண்டு காணிகளும் பொது மக்களின் நன்மைக்காக வெகு விரைவில் பறிமுதல் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.