பாராளுமன்றத்தில் வேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதாக காட்டி மக்களை ஏமாற்றி விடலாம் ஆனால் நாம் கொண்டுவந்த மக்கள் வெள்ளம் அந்த பெரும்பான்மையை விட அதிக பெறுமதிமிக்கதும் பலமானதுமென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
மேலும் 2 மில்லியன் மக்களை திரட்டி மாபெரும் வெற்றி பேரணியாக உருவாக்கி அரசாங்கத்தின் தான்தோன்றித்தனத்துக்கு கடிவாளமிட்டோம். அதேபோல மீண்டும் மக்களை திரட்டி கொழும்புக்குள் பிரவேசிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
என். எம் பெரேரா மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே
உலகில் நடைபெற்ற புரட்சிமிக்க பாதயாத்திரைகளுக்கு நிகராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை அமைந்தது. இவ்வளவு சக்திமிக்க போராட்டமாக இதனை மாற்றியதற்கு அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இதன்பின்னராவது அரசாங்கத்தில் உள்ளவர்கள் குறித்த பாதயாத்திரையை நாம் ஏன் முன்னெடுத்தோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் வேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதாக வெளிக்காட்டி மக்களை ஏமாற்றலாம். ஆனால் மக்கள் தற்போது தெளிவான தீர்மானங்களுக்கு வந்துள்ளனர். இதன்காரணமாகவே இத்தனை மக்கள் கூட்டம் எமக்காக பெரும் அர்ப்பணிப்புக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையில் இணைந்துக்கொண்டனர்.
எனவே நாம் கடைசியாக உங்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளோம். மீண்டும் ஒருமுறை பலமான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள இடமளிக்காது அராஜக தன்மையான ஆட்சியிலிருந்து விடுபடவேண்டும் என்றார்.