கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சினால் குச்சவெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட உபகரண விநியோகத்தில் பாரபட்சம் நிலவியுள்ளதால் அது குறித்து உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான இம்ரான் மஹ்ரூப் குச்சவெளி பிரதேச செயலாளரிடம் கேட்டுள்ளார்.
இந்த அமைச்சினால் வழங்கப்பட்ட தொழில்சார் உபகரணங்கள் தனியொரு கட்சி சார்பானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அரசினால் வழங்கப்படும் உதவிகள் எவ்விதப் பாகுபாடுமின்றி பொருத்தமான சகலருக்கும் வழங்கப்பட வேண்டும். இது தான் நியாயம். இப்போது முன்னெடுக்கப்படும் நல்லாட்சியில் இது போன்ற பாகுபாடுகளை அனுமதிக்க முடியாது.
எனவே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்ட பயனாளிகளைத் தெரிவு செய்தவர் யார்? அது எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது? என்ற விபரங்களோடு பயனாளிகள் பட்டியல் உள்ளிட்ட அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளரை இம்ரான் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.