எம்.வை.அமீர்-
நமது பிரதேசத்தில் பல்வேறு அமைப்புக்கள் இயங்கி வருகின்றபோதிலும் அவ் அமைப்புக்கள் பெண்களின் நலன்களை கவனத்தில் கொள்வதில் தவறிவிடுகின்றன என்று மருதம் கலைக்கூடலின் தலைவரும் முஸ்லிம் சமய மற்றும் தபால்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி பிரச்சார செயலாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
மருதம் கலைக்கூடலில் பிரதேச ரீதியாக பெண்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வின் ஒரு அங்கமாக சாய்ந்தமருது 12 ஆம் பிரிவில் பெண்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு ஐ.ஜாபீர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அநேக அமைப்புக்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தங்களது அமைப்புகளுக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொள்கிற போதிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறி விடுகின்றனர். ஆனால் மருதம் கலைக்கூடல் அவ்வாறான தவறுகளை எப்போதும் செய்யாது. இதுவரை இணைந்துகொண்டு செயற்படும் பெண்கள் எங்களது அமைப்பின் ஊடாக பல்வேறு உதவிகளை பெற்றுவருகின்றனர். அதேபோன்று எதிர்காலத்தில் உங்களது தேவைகளையும் அறிந்து எங்களால் முடிந்த அனைத்துவிதமான உதவிகளையும் செய்வோம் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது மருதம் கலைக்கூடலின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினர்.