திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினொரு வயதுடைய சிறுமியொருவரை பாலியல் ரீதியில் கையினால் தடவிய நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று செவ்வாய்கிழமை (9) உத்தரவிட்டார்.
கோணேசபுரி,ஆராம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் மனைவி பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ள பதினொரு வயதுடைய சிறுமியை அழைத்து பாலியல் ரீதியில் கையினால் தடவி செயற்பட்டுள்ளதாகவும், குறித்த சிறுமி விடயத்தை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை திங்கட்கிழமை (8) மாலையில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நேற்று செவ்வாய்கிழமை(9) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.