ஏ.எம்.றிகாஸ்-
கடந்த காலங்களில் இனவாதத்தைப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர்கள் நாட்டில் நடைபெறும் நல்லாட்சியை குழப்புவதற்கு பாதயாத்திரையை நடத்தியுள்ளார்கள். சிறுபான்மை இனத்தவருக்கு செய்த அநியாயங்களுக்கு கிடைத்த தண்டையாகவே இன்று இவர்கள் வீதியில் நிற்கிறார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்வரை யாராலும் கவிழ்க்க முடியாது, ஆட்சிக்கு துணை நிற்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏறாவூர்- ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் சுமார் 90 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள நோயாளர் விடுதிக்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சர் ஏஎல்ஏ நஸீர், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் சுகாதார, சுதேச வைத்தியத்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வைத்தியசாலை மாவட்ட தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளபோதிலும் வசதி வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படுவது குறித்து சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து நோயாளர்கள் தங்கியிருந்து வைத்திய சிகிச்சை பெறுவதற்கான விடுதி நிருமாணிக்கப்டுகிறது.
இங்கு முதலமைசச்ர் தொடர்ந்து உரையாற்றுகையில்--தமிழ் தேசிய கூட்டமைப்பு இனஒற்றுமையை வலுப்படுத்துவில் உறுதியாகவுள்ளது. கௌரவ சம்பந்தன் ஐயா தங்களுடைய அதிகாரத்தை எவ்வாறாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக காய்களை நகர்த்திக்கொண்டுள்ளார். சிறுபான்மை இனத்தவரை நசுக்கிய முன்னைய அரசாங்கத்தினருக்கு பாடம்புகட்டுவதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.
இந்த நாட்டிலே நீதி, ஊடக, கல்வி மற்றும் பேசும் சுதந்திரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே முன்னைய ஆட்சியாளர்கள் வீதியில் இறங்கி பாதயாத்திரை செய்கின்றனர். கடந்த காலங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெறும் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தாக்குதல்கள் உயிரிழப்புக்கள் அனைத்தும் நமக்கு தெரியும்.
இந்த நாட்டிலே இனப்பிரச்சினைக்கான உடனடியான தீர்வு வழங்கப்பட வேண்டிய தேவை கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்குள்ளது. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அவர்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள். இந்த விடயத்தில் சிறுபான்மை சமூகத்தினர் ஆதரவு வழங்கி நல்லாட்சி அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டும்.
இதேவேளை , கல்வி அபிவிருத்திக்காக 7500 மில்லியல் ரூபாய் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் பெறுமனே 350 மில்லியன் மாத்திரமே கிடைத்து வந்தது. இம்முறை சுகாதார துறைக்கு 1100 மில்லியன் ரூபா மாகாண ஆட்சிக்குள்ளும் மத்திய அரசிலிருந்து 1800 மில்லியன் ரூபாக்களும்; கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாண பாதைகள் புனரைமைப்புக்காக 9000 மில்லியன் ரூபாய் நிதியை மாகாணத்துக்கு கொண்டுவந்துள்ளோம்.
நாட்டில் நல்லாட்சியை கொண்டுவந்ததற்கான ஜனாதிபதி மற்றும் பிரதமர் நன்றிக்கடனாக மாகாணத்திலே மக்களுக்கு பாரிய அபிவிரு;திக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார்கள்.
இன்றும் ஒரு வருடத்துக்குள் உண்மையான மாகாண ஆட்சி என்பது என்னவென்று இந்த நாட்டு மக்களுக்கு தெரிவித்துவிட்டுத்தான் செல்வோம். பாரிய முரண்பாடுகள் குறைபாடுகளைக் களைந்து பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்கிறோம்.
கடந்த காலங்களில் கட்டடங்கள் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கற்களை திரட்டு கட்டடம் கட்டுமளவிற்கு அடிக்கல்கள் நடப்பட்டுள்ளன. நாங்கள் கட்டடத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னரே அடிக்கல் நடுவோம். ஆரசாங்டகத்தின் பணத்தில் கட்டடங்களை கட்டிவிட்டு அரசியல்வாதிகளின் பெயர்வைக்கும் வெட்கம் கெட்ட கலாசாரம் மற்றப்பட வேண்டும். கட்டடங்களுக்கு பெயர் வைப்பது வெட்கக்கேடான விடயமாக அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லையா?? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.