க.கிஷாந்தன்-
மலையக பெண்களின் மத்தியில் பல திறமைகள் இருக்கின்ற போதிலும் எவரும் இவர்களுக்கு இருக்கின்ற திறமைகளை இணங்கண்டு களம் அமைத்து கொடுக்காத காரணத்தினால் திறமைகள் மழுந்தழிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலையக பகுதிகளில் இருக்கின்ற பெண்கள் எந்த துறையிலும் ஈடுபடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை காரணம் காட்டி பலர் இவர்களுக்கான வாய்ப்பு வசதிகளை வழங்குவதும் இல்லை.
இவர்களுக்கு இருக்கின்ற திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் சிவில் அமைப்பான அடையாளம் அமைப்பு விளையாட்டு துறையை ஊக்கப்படுத்தி வருகின்றது.
அந்தவகையில் இரண்டாவது முறையாக அடையாள அமைப்பின் ஏற்பாட்டில் மகளிர்க்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 31.07.2016 அன்று நானுஓயா நாவலர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 10 விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்டது. எனினும் இறுதி சுற்றுக்கு நானுஓயா எடின்புரோ தாஜ்மஹால் அணியும், கொட்டகலை ஜீ.டி.சி விளையாட்டு கழகமும் தெரிவாகியது. இரண்டு அணியில் முதலாம் இடத்தை கொட்டகலை ஜீ.டி.சி அணியும், இரண்டாம் இடத்தை நானுஓயா எடின்புரோ தாஜ்மஹால் அணியும் பெற்றுக்கொண்டது.
முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 5,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான பணப்பரிசும், வெற்றிக்கிண்ணமும் வழங்கிய இதேவேளை பங்குபற்றிய அணிகளுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் அதிதிகளாக பாடசாலை உப அதிபர் மற்றும் அடையாள அமைப்பின் செயலாளர் ப.விஜயகுமார், பிராந்திய ஊடகவியலாளர் கே.புஸ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.