ஷபீக் ஹுஸைன்-
அம்பாறை மாவட்டத்தில் சீனி உற்பத்திக்காக கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு, சம்பந்தப்பட்ட சகல தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் தீர்வுகளை காண்பது தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை பெற்ற பின்னரே உரிய நடவடிக்கை மேற்கொள்ப்படும் என்று புதன்கிழமை (3) பிற்பகல் நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் இறுதியில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார்.
பிரஸ்தாப விவகாரம் தொடர்பில் நடைபெற்ற இந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, கரும்பு செய்கையில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், இழப்புகளுக்கும் வழங்கக் கூடிய நிவாரணங்கள் பற்றி சீனி உற்பத்தியாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் கரும்புச் செய்கையில் ஈடுபடுவோருக்குத் திருப்தியளிப்பனவாக காணப்படவில்லை என்றும், சர்ச்சைக்குரியனவாக இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடலின்போது நிதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இந்த விடயம் குறித்து கரும்புச் செய்கையில் ஈடுபடுவோரின் பிரதிநிதிகளையும், சீனி உற்பத்தியாளர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறையில் மீண்டும் நேரில் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், லங்கா சீனிக் கம்பனியின் தலைவர் நவின் அதிகாரம, ஏனைய சீனி தொழிற்சாலைகளின் முகாமைத்துவத்தினர், நிதி அமைச்சினதும் திறைசேரியினதும் உயரிதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.