கைரிய்யா பாடசாலையின் 2016 வருடத்திற்கான பொதுக் கூட்டம் நேற்று 06.08.2016 அன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. 2016 மே மாதம் இடம்பெற வேண்டிய கூட்டத்தை அதிபர் வேண்டுமென்றே காலம் கடத்திச் செல்வதாக வலயக் கல்விப்பணிப்பாளருக்கு பெற்றோர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்யை தினம் அவசர அவசரமாக ஐந்து நாட்களுக்கிடையில் இந்த கூட்டம் அதிபரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு வருடங்களைப் போல இம்முறையும் தனக்கு வேண்டிய பெற்றோர்களை நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொள்ள அதிபர் இரகசியமாக மேற்கொண்ட முடிவை பெற்றோர்கள் ஆட்சேபித்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டு வருடங்களாக தனக்கு விருப்பமான தலையாட்டும் பொம்பைகளை அதிபர் திட்டமிட்டு நிர்வாகக் குழுவில் சேர்த்து வருவதாகவும், செரன்டிப் அமைப்பின் தலைவரும் ஸாஹிரா கல்லூரியின் நிர்வாக தலைவருமான பவ்சுல் ஹமீடின் ஆலோசனைக்கிணங்கவே இந்த அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஸாஹிராவைப் போன்று கைரிய்யா பாடசாலையையும் பணக்கார பிள்ளைகளின் பாடசாலையாக மாற்றுவதன் மூலமே பாடசாலையின் தரத்தை உயர்த்த முடியும் என்ற கொள்கையில் செயற்படும் செரன்டிப் நிறுவனத்தின் தலைவர் பவ்சுல் ஹமீட் தனிப்பட்ட முறையில் பாடசாலை அதிபருக்கு பல ஆயிரம் ரூபாய்களை மாதாந்த கொடுப்பனவாக வழங்கி வரும் தகவலும் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
கடந்த வருட 2015 நிர்வாகக் குழுவில் செயலாளராக செயற்பட்டவர், பவ்சுல் ஹமீடின் தனிப்பட்ட சிபார்சின் பேரிலேயே தெரிவு செய்யப்பட்டதாகவும் அறிய வருகிறது. இந்தத் தகவலை அந்த செயலாளரே பெற்றோர்களிடம் கூறியிருப்பதாகவும் அறிய வருகிறது.
வழமை போல பாடசாலை நிர்வாகக் குழுவில் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பத்தை (கடந்த வருடம் 2015) பாடசாலை நிர்வாகத்திற்கு வழங்காமல் இருந்த இந்த குறித்த நபரை, பவ்சுல் ஹமீடின் வேண்டுகோளுக்கிணங்க, ஏற்கனவே செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த கடந்த காலங்களில் பாடசாலை அபிவிருத்திக்கு அயராது பாடுபட்ட ஊடகவியலாளர் மபாஹிர் மௌலானாவை நீக்கிவிடும் நோக்கில் அதிபரால் இரகசியமாக இணைக்கப்பட்டதாவும் அறிய வருகிறது.
ஹமீடியா உரிமையாளரும் செரன்டிப் நிறுவனத்தின் தலைவருமான பவ்சுல் ஹமீடின் ஆலோசனையின் பேரிலேயே தற்போதைய கைரியா நிர்வாகம் செயற்பட்டு வருகிறது.
பௌசுல் ஹமீடின் செரன்டிப் நிறுவனத்திடமிருந்து மாதா மாதம் பெறும் பணத்திற்காக அவரின் கட்டளைக்கு அடிபணிந்து செயற்படும் கைரிய்யா அதிபர், பாடசாலையின் தற்போதைய வளர்ச்சி நிலைக்கு மிகவும் பாடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானோடு முரண்பட்டும் வருகிறார்.
மத்திய கொழும்பின் பாராளுமன்ற பிரதிநிதியான, கைரியா பாடசாலையின் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த முஜீபுர் றஹ்மானின் பெயரை புதுக்கட்டட திறப்பு விழா அழைப்பிதழில் இருந்து நீக்கி விடுவதற்கு இந்த பண உதவி வழங்குபவரும், அவரின் பின்னால் இருக்கும் இரண்டு அரசியல்வாதிகளுமே காரணம் என்று அறிய வருகிறது.
தற்போது மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலய அபிவிருத்திக்கு ஏற்பட்டுள்ள தடைகளுக்கும் இவர்களே காரணமாகும். பணத்தை வீசி பாடசாலை அதிபர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தனது தேவைக்கேற்றவாறு ஆட்டும் இந்தக் குழுவினரின் செயற்பாடு நேற்றைய கைரியா பொதுக் கூட்ட குழப்பத்தின் பின்னணியிலும் இருப்பது நிரூபணமாகியுள்ளது.
அதிபரும், கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த கல்வியதிகாரியும் '' புதியவர்கள் மட்டும் வாருங்கள்'' '' புதியவர்கள் மட்டும் வாருங்கள்'' என்று அடிக்கடி அழைப்பு விடுத்துக்கொண்டிருந்ததை அவதானித்த பெற்றோர் அதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பழைய நிர்வாக சபை அங்கத்தவர்கள் ஓரிருவர் வந்தாலும், தனது பழைய வண்டவாளங்களை மறைக்க முடியாது போகும் என்பதை உணர்ந்த அதிபர் மிகவும் கவனமாக காயை நகர்த்திக் கொண்டிருந்ததை பெற்றோர்கள் எதிர்த்திருக்கின்றனர்.
புதியவர்களை மட்டுமே அபிவிருத்திச் சங்கத்திற்கு சேர்க்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அதிபர் பவ்சுல் ஹமீடின் அதரவாளர்களான பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒரு போதும் பங்கு கொள்ளாத என்றும் கண்டிராத முகங்களை மேடைக்கு அழைப்பதில் மும்முரமாக ஈடுபாடு காட்டியுள்ளார்.
பிரச்சினைகளைத் தட்டிக் கேட்கும் கடந்த நிர்வாக சபையில் இருந்த பெற்றோர்களை அதிபர் தனதுரையில் கடுமையாக சாடியுள்ளார். இதன் மூலம் தனக்கு தேவையாக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காத தனது ஏவல்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளை வைத்துக் கொள்வது தனக்கு ஆரோக்கியமானது என்று அவர் எண்ணியிருப்பதுவும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
நேற்றைய கூட்டத்திற்கு அதிபரால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பாடசாலை நிகழ்வுகளிலோ, வேலைத்திட்டங்களிலோ ஒருபோதும் கலந்துகொள்ளாத புதுமுகங்கள் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
பணத்தைக் கறப்பதே நோக்கமாகக் கொண்ட ஸாஹிராவின் நிர்வாகம் தொடர்பாகவும், கொழும்பின் ஏழைப் பிள்ளைகள் ஸாஹிராவிற்கு மறுப்பது தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கும், பவ்சுல் ஹமீடுக்கும் இடையில் பலத்த கருத்து முரண்பாடு நிலவி வருகின்றது.
இதுவே பாடசாலை அதிபர்களுக்கு பணம் வழங்கப்பட்டு முஜீபுர் றஹ்மானுக்கு எதிரான ஒரு குரோதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. தாருஸ்ஸலாம், கைரியா போன்ற பாடசாலைகளின் அதிபர்களின் தற்போதைய அடாவடித்தனங்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற இந்தப் பணம் காரணமாக இருப்பதாக ஒரு சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கு ஸ்ரீலசு கட்சியின் கொழும்பு அரசியல்வாதிகள் பின்னணி ஆதரவும் இந்த பண முதலைகளான அதிபர்களுக்கு கிடைத்து வருகிறது.
புதுக்கட்டட திறப்பு விழாவில் முஜீபுர் றஹ்மானின் பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்து, அதிபரின் நன்றி கெட்ட செயலைக் கண்டித்து, அவரின் பெயரை அழைப்பிதழில் போட வைத்த பெற்றோர்களோடு முரண்பட்டிருக்கும் கைரிய்யா அதிபர் பவ்சுல் ஹமீடால் சிபார்சு செய்யப்பட்டவர்களாக நம்பப்படும் அதிபரின் ஆதரவாளர்களை நிர்வாகக் குழுவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தான் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் உரிமையை மறுத்த கைரியா அதிபர், ஒலிவாங்கியை பறித்துக் கொண்டு ஓடியதாகவும், பயத்தில் நடு நடுங்கி அவசர அவசரமாக சலவாத்தை சொல்லி விட்டு தனது பரிவாரங்களோடு ஓடியதாகவும் அறிய வருகிறது. ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தற்போதைய அதிபர் அப்போதைய பாடசாலை நிர்வாகக் குழுவின் அழுத்தத்தின் காரணமாக கல்வி கற்கும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை முன்வைத்து வேறு பாடசாலைக்கு மாற்றலாகி செல்லுமாறு அப்போதைய நிர்வாகக் குழுவினால் வேண்டப்பட்டார்.
அதன் நிமித்தம் கொழும்பு ரி.பி.ஜாயா பாடசாலைக்கு மாற்றலாகி சென்று கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திரும்பி கைரிய்யா பாடசாலைக்கு அதிபராக வந்திருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.
தனது வேறுபாடசாலைக்கான மாற்றலை ஒரு படிப்பினையாகக் கொள்ளாது மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளமாய் பழைய தலைக்கணம் பிடித்த வேலைத் திட்டத்தை இவர் கைரியாவில் அரங்கேற்றத் துடிப்பதாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.
கைரியா எனது உயிர் என்று பெற்றோர்கள் மத்தியில் கூக்குரலிடும் இவர் இவரது பிள்ளையை தான் உயிராய் நேசிக்கும்கை ரியாவில் சேர்க்காமல் வேறு பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் சேர்த்திருப்பதன் மூலம் அதிபரின் கைரியா மீதான போலிப்பற்று வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.
இவரின் கடந்த கால நிகழகால குற்றங்களை எழுத்து மூலமாக கல்வியமைச்சிற்கும், சிறுவர் பாதுகாப்பு பணியகத்திற்கும் வழங்குவதற்கன நடவடிக்கைகளை மெற்கொள்ளவிருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித உரிமைகள் கமிஷனிடம் இவருக்கு எதிராக கடந்த மாதம் முறைப்பாடொன்றை பெற்றார் ஒருவர் முன்வைத்திருப்பதுவம் இங்கு குறிப்பிடத்தக்கது.