இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கும் எந்த திட்டமும் இல்லையென உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியினர் ஒவ்வொரு நாள் காலையிலும் தொங்கிக் கொள்வதற்கு ஒன்று கிடைக்கின்றதா? என தேடிக் கொண்டு திரிகின்றனர். அனுமனின் வாலிலாவது தொங்கிக் கொண்டு அதிகாரத்துக்கு வர முடியுமா? என முயற்சி செய்கின்றனர்.
கூட்டு எதிர்க் கட்சிக் கூட்டம் ஒரு காலத்தில் மத்திய வங்கியின் முறி பிரச்சினையில் தொங்கிக் கொண்டது. பின் வற் வரியிலும், அடுத்த வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு கொண்டு வருவதிலும் தொங்கிக் கொண்டனர். தற்பொழுது இந்தியாவுக்கான பாலத்தில் தொங்கிக் கொண்டுள்ளனர்.
அந்தப் பாலத்தை அமைக்க எந்தத் தேவையும் இல்லை. எமது நாட்டிற்குள் அமைப்பதற்கு எவ்வளவு பாலங்கள் இருக்கின்றன.இந்த பாலம் அமைப்பதையொல்லாம் நிறுத்தி விட்டு இந்தியாவுக்கு பாலம் அமைக்கவா இவர்கள் சொல்கின்றார்கள்? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.