அரசாங்க சேவையிலுள்ள முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை தினங்களில் தமது மதக்கடமையினை (ஜும்ஆத் தொழுகை) நிறைவேற்றுவதற்கு திணைக்கள தலைவரின் விருப்பத்திற்கமைய இரண்டு மணித்தியால விடுமுறையை வழங்க முடியும் என பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஜும்ஆத் தொழுகைக்காக 1 மணித்தியால விடுமுறை அவகாசமே வழங்கப்பட்டது. தற்போது அது 2 மணித்தியாலங்களாக்கப்பட்டுள்ளது..
வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு ஜும் ஆ தொழுகைக்காக இரண்டு மணித்தியால குறுகிய விடுமுறை வழங்குவது தொடர்பாக தாபன விதிக்கோவையின் திருத்தம் தொடர்பில் பொது நிருவாக அமைச்சு 21/2016 இலக்க சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது.
இச்சுற்று நிருபம் 2016.08.30 ஆம் திகதி சகல அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திணைக்கள தலைவரின் விருப்பின் பிரகாரம், சேவையின் தேவைக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படா வண்ணம், முஸ்லிம் அரச அலுவலர்களுக்கு தமது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக வெள்ளிக்கிழமை தினங்களில் மதியம் 12 மணியிலிருந்து இரண்டு மணித்தியாலங்களுக்குச் குறையாத காலம் விசேட விடுமுறையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க இது முஸ்லிம் அரச ஊழியர்களின் அடிப்படை உரிமையை மீறுவதால் அது வாபஸ் பெறப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர் ஏ.எல்.முஹமட் முக்தார் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த சுற்று நிருபத்தில் திணைக்களத் தலைவரின் விருப்பத்திற்கமைய எனும் பதம் ஒரு முஸ்லிம் ஊழியரின் மதக் கடமையை நிறைவேற்ற பல தடைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
முஸ்லிம் அல்லாத திணைக்களத் தலைவர்கள் மதக்கடமையை நிறைவேற்றும் வாய்ப்பினை மறுக்கலாம்.
குறிப்பாக தமிழ், சிங்கள பாடசாலைகளில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் தமது மதக்கடமையை வெள்ளிக்கிழமைகளில் நிறைவேற்றுவதற்கு இச்சுற்றுநிருபத்தை காரணம் காட்டி தடைகள் ஏற்படுத்தப்படலாம். இலங்கை அரசியலமைப்பில் ஒவ்வொரு பிரஜைக்குமான மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அச்சுதந்திரத்தை பொது நிருவாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் படி திணைக்கள தலைவரிடம் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த சுற்று நிருபம் மீளப் பெறப்பட்டு மதச்சுதந்திரத்தைப் பேணும் வகையில் வெளியிடப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிருவாக திணைக்கள உயர் அதிகாரிகளிடம் கருத்து வினவியபோது இச்சுற்று நிருபம் 1985 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வருவதாகவும், குறிப்பிட்ட குறுகிய விடுமுறை இதுவரைகாலம் பிற்பகல்1 மணி முதல் 2 மணி வரையான காலமே ஒதுக்கப்பட்டிருந்தது.
அண்மையிலே இதில் நேரத்தில் மாத்திரமே மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது பி.ப.1 மணியிலிருந்து 2 மணி வரை என்றிருந்த நேரம் மதியம் 12 மணியிலிருந்து 2 மணிவரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
விடிவெள்ளி ARA.Fareel