முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெலிக்கடை சிறைச்சாலையின் வார்ட் சி 03 அறையிலிருந்து வார்ட் பி 03 அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, பாரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன், வெலே சுதா எனப்படும் கம்பல விதானவுடனே துமிந்த சில்வா வார்ட் சி 03 அறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் பாதுகாப்பு கருதி வெலே சுதாவின் அறையிலிருந்து வார்ட் பி 03 அறைக்கு துமிந்த சில்வா மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச் சந்திர உள்ளிட்ட நால்வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதியன்று பிற்பகல் வேளையில் அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
நனறி வீரகேசரி..