பொத்துவில் தாஜகான்-
பொத்துவிலின் இழந்த மாகாணசபை பிரதி நிதித்துவத்தை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்புக்களை பொத்துவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்வதற்கு தீர்க்கதரிசனமான முடிவினை எடுக்கவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ். வாசித் இன்று (10) தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பொத்துவில் பிரதேசம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்து வருகின்றது. இதற்கு கடந்த கால தேர்தல் வாக்குகள் எமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இந்தவகையில் எதிர்காலங்களில் நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எச். றகீம் அவர்களை பொத்துவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான மாகாணசபை வேட்பாளராக களமிறக்கி அவருக்காக வேண்டி ஓரணியில் நின்று வெற்றிபெறச் செய்யவுள்ளோம்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால வெற்றிக்காகவே இம்முடிவை நாம் எடுத்துள்ளோம். இது பற்றி கட்சியின் தலைவர் அவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கவுள்ளோம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது மக்களின் கண்ணீராலும் மக்களின் வியர்வையாலும் வளர்த்த கட்சியாகும் இக்கட்சியை யாரும் கூறு போட முடியாது. அதற்காக வேண்டி எமது கருத்து வேறுபாடுகளை மறந்து பொருத்தமான வேட்பாளரை நாம் தெரிவு செய்துள்ளோம். என்றார்.