++++++++++++++++++
Mohamed Nizous
குர்பான் மாடு
குத்பா மேடையில்
அரை மணி நேரமாய்
அறுக்கப்பட்டது.
வாங்கி முடிந்து
வாரமும் சென்ற பின்
வாங்கும் மாடு பற்றி- ஒலி
வாங்கியில் சொன்னதால்
தூங்கினார் மக்கள்
தொடர்ந்தது குத்பா.
இடையில எழும்பி
என்னவென்று பார்க்க
முடியைப் பற்றி
முழங்கினார் மேடையில்
மீண்டும் தூங்கி
மெல்ல முழிக்க
கத்தியைப் பற்றி
கத்தினார் பெரிதாய்
அடுத்து வந்த
ஐந்து நிமிடத்தில்
படுத்த மாட்டுக்கு
கொடுத்தார் விளக்கம்.
கோழியைக் கொடுக்கேலா
கொக்கைக் கொடுக்க ஏலா
வேலியைத் தாண்டி
விரைந்தது விளக்கம்.
மூவாயிரத்தி சொச்சம்
முஸ்லிம்கள் நேரத்தை
குர்பான் கொடுத்த
குத்பா முடிந்தபின்
எழுந்தது கேள்வி
இதயத்தில் இருந்து.
நேரத்தைப் போக்க
நிகழ்த்தும் குத்பாவால்
யாருக்கு லாபம்
பேருக்கா குத்பா?