சுலைமான் றாபி-
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவுகின்ற காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு காணும் விஷேட அறிக்கை நேற்று முன்தினம் (07) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனால் ஒருங்ககிணைப்புக் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது
அவற்றுள், அஷ்ரஃப் நகர் காணி, கிரான் கோமாரியின் வனவிலாகாவிற்கு ஒதுக்கப்பட்ட காணி, நிந்தவூர், பொத்துவில் விவசாயக் காணி, பொன்னன்வெளி மாற்றீட்டு காணி தற்பொழுது வனவிலக்காவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொத்துவில் பாளையடி கரங்கோ பிரதேச காணிகள் போன்ற காணிப்பிணக்குகள் இக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
மேலும் காணிப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட செயலக ரீதியாக மாவட்டசெயலாளர் தலைமையில் ஒருகுழுவினை அமைப்பதற்கு மாவட்டசெயலாளர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததோடு, கடந்த கால அவலச்சூழ்நிலையால் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளியேறி கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சாய்ந்தமருது கல்முனை மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் வசித்து வருகின்ற மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச செயலாளரினால் மிக விரைவில் விஷேட கூட்டமொன்றினை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.