எம்.ஜே.எம்.சஜீத் -
கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவின் கீழுள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சமநிலை பேனப்பட வேண்டும் இந்தவிடயத்தில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் விசேட கவனம் செலுத்த வேண்டுமென கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை கேட்டுக்கொண்டார்.
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் தயாகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், கோடிஸ்வரன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் (3) அம்பாரை கச்சேரியில் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இவ்வருடத்திற்கான நிதியொதுக்கீட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை புறக்கனிக்கப்பட்டுள்ளதாகவும், குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்தார். இதுதொடர்பாக உரையாற்றிய போதே உதுமாலெப்பை உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாணத்தினுடைய சுகாதார அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிராந்தியங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளின் சமநிலை பேனப்பட வேண்டும்.
குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரும் எமது பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். எனவே எமது வைத்தியசாலைகளின் அபிவிருத்திப் பனிகளில் பாகுபாடு காட்டாது நிதியொதுக்கீடுகளை செய்ய வேண்டும். இல்லை என்றால் அது நல்லாட்சியின் நோக்கத்தை பாதிப்பதாக அமைந்துவிடும்.
எனவே எதிர்காலத்தில் இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் விசேட கவனம் செலுத்த வேண்டும் அப்போதுதான் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வருவதனை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.