பெளத்த மதத்துக்கும், பெளத்த கலாசாரத்துக்கும் சவால்கள் ஏற்பட்டுள்ளதால் சிங்கள இளைஞர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அவர்களை நாம் சமாதானப்படுத்தி எமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். சங்க பாதுகாப்புச் சபையின் கோரிக்கைகளுக்கு 14 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் எமது கட்டுப்பாட்டிலிருந்து அவர்களை நாம் விடுவித்துவிடுவோம். அதன் பிறகு நாட்டிற்குள் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் நாம் பொறுப்பல்ல.
மகாநாயக்க தேரர்களே பொறுப்புக்கூற வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடம் வேண்டுகோள் விடுத்தார். மல்வத்த மகாநாயக்க தேரரிடம் 22 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. மகஜரை மகாநாயக்க தேரரிடம் கையளித்து ஞானசார தேரர் மேற்குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்தார்.
கையளிக்கப்பட்ட 22 கோரிக்கைகள் அடங்கிய மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் புதைபொருள் ஆய்வுப் பிரதேசங்களிலிருந்தும், புனித பூமி பிரதேசங்களிலிருந்தும் குடியிருப்புகளும், பள்ளிவாசல்களும் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
எந்த மதத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதைபொருள் பிரதேசங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
மத்ரஸாக்களிலும், அரபு கல்லூரிகளிலும் அடிப்படை வாதம் போதிக்கப்படுகிறது. எனவே இவ்வாறான மத்ரஸாக்களும், அரபு கல்லூரிகளும் தடை செய்யப்படுவதுடன் ஏனைய மதத்தவர்களுக்கு சட்டமும், நாட்டின் வரலாறும் போதிக்கும் பாடசாலைகள் நிறுவப்படவேண்டும்.
வடக்கு, கிழக்கில் உள்ள பெளத்த மரபுரிமை ஸ்தலங்களும், வரலாற்றுத் தலங்களும் அரசாங்க வர்த்தமானி மூலம் புனிததலமாக பிரகடனப்படுத்தி பாதுகாக்கப்படவேண்டும்.
எந்தவொரு கிராம அல்லது நகர பாதைகள் அரபு, முஸ்லிம், தமிழ் பெயர்களில் இருக்கக்கூடாது. அனைத்தும் சிங்கள மொழிக்கு மாற்றப்படவேண்டும்.
பெயர் மாற்றப்பட்ட பாதைகளின் பெயர்களுக்கு மீண்டும் பழைய பெயர்களே சூட்டப்படவேண்டும். மதமாற்றம் தடைசெய்யப்படவேண்டும்.
அதற்கான சட்டமொன்று கொண்டுவரப்படவேண்டும்.
பாடசாலைப் புத்தகங்களில் வரலாறு திரிபுபடுத்தப்பட்டுவருகிறது. இது தடைசெய்யப்பட்டு திருத்தியமைக்கப்படவேண்டும்.
கூரகல, தெவனகல மற்றும் முகுதுவிகாரை போன்ற பெளத்த மரபுரிமைத் தலங்கள் முஸ்லிம்களிடமிருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும்.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெறும் நிதியுதவிகள் அடிப்படைவாதிகளைச் சென்றடைகின்றன. இதுதொடர்பாக கட்டுப்பாடுகள் கொண்டு வருவதுடன் அவை கண்காணிக்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட வேண்டும். அத்தோடு அப்பிரதேசங்களில் குடியேறியுள்ளவர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மாலைதீவு மற்றும் பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கையில் அடைக்கலம் வழங்கவோ, பிரஜாவுரிமை வழங்கவோ கூடாது.
தமிழ், முஸ்லிம் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது மத தலங்களில் மாதம் ஒரு முறை கூடி சமூகப்பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள்.
ஆனால் சிங்கள பாராளுமன்ற உ றுப்பினர்கள் இவ்வாறு செயற்படுவதில்லை. அதனால் மததலங்களில் மாதம் ஒரு முறை கூடுவது கட்டாயமாக்கப்படவேண்டும்.
பெளத்த மதத்துக்கு முதலிடம் வழங்கப்படுவதோடு இலங்கை சிங்களவர்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். தஹம் (சமய) பாடசாலைக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பரீட்சை எழுதுவதும் கட்டாயமாக்கப்படவேண்டும். ஞாயிறு மற்றும் போயா தினங்களில் டியுசன் தடைசெய்யப்படவேண்டும் என்பனவாகும்.
மகாநாயக்க தேரர்கள் இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகள் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.jm