தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 65 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு நிற்க, நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை நிபுணர் ஜெயலலிதாவிற்கு பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, சிறந்த டாக்டர்கள் சிலர் கடந்த சில வாரங்களாக வீட்டுக்கே போகவில்லை. அவர்கள் அனைவரின் துணையால் முதல்வருக்கு கடும் பிரச்சினை இருந்த அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்படுகின்றன என்று கூறினார். முதல்வருக்கு முழு உடல் பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தானாகவே சில உடற்பயிற்சிகளை செய்ய பிசியோ தெரபி நிபுணர்கள் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு வகையில் பிசியோ தெரபி கொடுக்கப்படுகிறது. அடுத்து அவர் எழுந்து நின்று நடக்க வேண்டும். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார் டாக்டர் பிரதாப் ரெட்டி. அவர் வீட்டுக்கு செல்வதை அவரே முடிவு எடுப்பார். முடிவு எடுப்பது நான் அல்ல என்றும் கூறினார் டாக்டர் பிரதாப் ரெட்டி.
ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். அவர் வீட்டுக்கு திரும்புவது எப்போது என்று ஜெயலலிதா சொல்கிறாரோ அப்போதுதான் அவர் வீட்டுக்கு செல்வார். எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கிறதாக அவர் எப்போது உணர்கிறாரோ? அப்போது வீடு திரும்புவார் என்றும் கூறியிருக்கிறார். முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவது பற்றிய முடிவெடுப்பது முதல்வர் கையில்தான் இருக்கிறது என்பதை திரும்பத்திரும்ப சொல்லி வருகிறார் டாக்டர் பிரதாப் ரெட்டி.
சசிகலா ஆலோசனை-
முதல்வரின் டிஸ்சார்ஜ் தொடர்பாக சசிகலா தீவிர ஆலோசனை செய்து வருகிறாராம். ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை ஜாதகப்படி சரியில்லாமல் இருக்கிறது. எனவே, டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தாலும் டிசம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று ஜோதிடர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளார்களாம்.
தேதி குறித்த ஜோதிடர்-
டிசம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு முதல்வரின் ஆரோக்கியத்துக்கு எதுவும் சிக்கல் இருக்காது. அவர்களின் ராசிப்படி அமோகமாக இருப்பார். டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிக்குள் டிஸ்சார்ஜ் வைத்துக் கொள்ளலாம். அது வளர்பிறையாகவும் இருக்கிறது என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடு திரும்புவது எப்போது டிசம்பர் 5ம் தேதி ஷஷ்டி திதி அன்றைய தினம் சுப முகூர்த்தம் என்றாலும் ஜெயலலிதா வெள்ளி, அல்லது சனி அதாவது டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10ம் தேதி தசமி அல்லது ஏகாதசி நாளில் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பின்னர் ஜெயலலிதா வீடு திரும்ப உள்ளதால் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.