அதிகாரப்பகிர்வு, சமஷ்டியா, ஒற்றையாட்சியா? அரசியலமைப்பு வழிநடத்தல் குழுதான் இறுதிமுடிவை எடுக்கும்



"மாகாணத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அதனை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதையிட்டும் ஆராய்ந்து அறிக்கை தரவேண்டும் என்பது தான் எமக்குத் தரப்பட்ட ஆணை. அதிகாரப் பரவலாக்கல் எவ்வாறு அமையவேண்டும், அதிகாரப் பரவலாக்கல் அலகு, அரசாங்கத்தின் தன்மை என்பனவற்றை வழிநடத்தல் குழுவே ஆராய்ந்து அறிக்கை தரும். அவை தொடர்பில் ஆராயும் பொறுப்பு எமக்குத் தரப்படவில்லை" என அரசியலமைப்பு நிர்ணய சபையின் உப குழுவின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பு உப குழுவின் பரிந்துரையில் அரசின் தன்மை குறித்து அதாவது, ஒற்றையாட்சியா சமஷ்டியா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயத்திலிருந்து உப குழு நழுவிச் சென்றுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைவிட வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் இந்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் இது தொடர்பில் விளக்கமளித்த சித்தார்த்தன், தமது தலைமையிலான உப குழுவுக்கு எழுத்து மூலமாக வழங்கப்பட்ட வரையறையில், மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அவற்றை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதையிட்டும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறே தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடுகின்றார். 

"மாகாண சபையின் அதிகாரங்கள், அதிகாரப்பரவலாக்கல் மற்றும் அரசின் தன்மை என்பன குறித்து இந்தக் குழு ஆராயவேண்டியதில்லை என்பதும் ஆரம்பத்திலேயே எமக்குச் சொல்லப்பட்டுவிட்டது. அதனால் அந்த வரையறைக்குள் இருந்தே எமது செயற்பாடுகள் அமைந்திருந்தன" எனவும் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார்.

இருந்தபோதிலும், மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவுகள் என்ற அடிப்படையில் சில விடயங்களை சித்தார்த்தன் தலைமையிலான உப குழு வலிந்து பரிந்துரை செய்திருக்கின்றது. முக்கியமாக காணி, பொலிஸ் அதிகாரிங்கள் பற்றியும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகாரம் சம்பிரதாயமானதாக இருக்க வேண்டும் எனவும், நிறைவேற்று அதிகாரம் அவருக்கு இருக்கக்கூடாது எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியமானதாகும். வழிநடத்தல் குழுவினால் 12 விடயங்கள் தொடர்பில் ஆராயுமாறே உப குழுவுக்கு வரையறை விதிக்கப்பட்டிருந்தது. ஆளுநர், பொதுச் சேவை போன்ற 12 விடயங்கள் தரப்பட்டிருந்தன. 

இதேவேளையில் பிரதான வழிநடத்தல் குழு அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான விடயங்களையிட்டு இப்போது ஆராய்ந்து வருகின்றது. இக்குழுவின் இடைக்கால அறிக்கை டிசெம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அரசின் தன்மை, அதிகாரப்பரவலாக்கல் அலகு, அதிகாரப்பரவலாக்கல் விடயங்கள் என்பவற்றை உள்ளடக்கிய இன நெருக்கடிக்கான தீர்வாக இந்த இடைக்கால அறிக்கை அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -