இனவாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்த வேலைத்திட்டம் - அமைச்சர் றிசாட்

சுஹைப்.எம்.காஸிம்-
முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அட்டூழியங்கள், அராஜகங்களுக்கு முடிவு கட்டும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் கரம்பை சபா-மர்வா கிராமங்களுக்கான புதிய பாதை திறப்பு விழாவும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக பங்கேற்று அமைச்சர் உரையாற்றிய போதே இந்தத் தகவலை வெளியிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த ஒரு வார காலமாக பொதுபலசேன இனவாதிகளும் கடும் போக்காளர்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டிய தீவிரச்செயற்பாடுகளின் பிரதிபலிப்பே இன்று காலை பெப்பிலியானாவில் பெஸன் பக் நிறுவனம் எரிக்கப்பட்டமை என்ற நியாயமான சந்தேகம் எமக்கு இருக்கின்றது. அந்தச்சம்பவ நடந்த இடத்துக்கு நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இன்று காலை சென்று (20) பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் விவரங்களையும் திரட்டினோம். 

உரிமையாளருடன் இணைந்து பொலிசாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிறுவன ஊழியரை பார்வையிட்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தோம். அந்த ஊழியர் கண்டெடுத்த CCTV கெமராவை பலாத்காரமாக பறித்தெடுதத்துடன் அவரையும் பொலிசார் தாக்கியுள்ளனர். 

இந்த விவரங்களையெல்லாம் நாங்கள் பிரதமரிடம் தெரிவித்து இந்த இனவாத செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் முஸ்லிம்கள் மீதான இந்த அட்டுழியங்கள் இனிமேலும் தொடரக்கூடாதெனவும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளோம்.

கடந்த 3 வருடங்களாக இனவாதிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு தீவிரமடைந்துள்ளது. அவர்களின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நேற்றய தினம் (19) கண்டியில் முஸ்லிம்களுக்கெதிரான ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்காக பொது பல சேனாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 'முடியுமானால் 5000போரை திரட்டிப்பாருங்கள்' அவ்வாறு சேர்ந்தால் நான் இராஜினாமாச் செய்வேன் என றிசாட் கூறியதாக செய்தி வெளியிட்டு சிங்கள மக்களை உசுற்பேத்தி ஆள் சேர்த்தனர். என்னைப்பலிக்கடாவாக்கி தமது இனவாதச் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். நேற்றைய (19) கண்டிக் கூட்டத்தில் பொது பல சேனாவின் செயலாளரும் இனவாதிகளுக்கு தலைமை தாங்குபவருமான ஞானசார தேரோ முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்கள் மட்டுமே அவரைக் கைது செய்வதற்கு போதுமானது. 

இனவாதிகள் பெஸன் பக் நிறுவனத்தை இரண்டு முறை எரித்து சாம்பராக்கியுள்ளனர.; அதே போன்று தர்ஹா நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான மல்லிகா நிறுவனத்தை 3 முறை எரித்து சாம்பராக்கினர். இவர்களின் சதி வேலைகள் இரவு 8மணிக்கும் 9 மணிக்கும் இடையிலையே அரங்கேறுகின்றது. தர்ஹா நகரில் ஞானசாரருக்கு எதிராக 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ள போதும் இற்றைவரை எதுவுமே விசாரிக்கப்படவி;ல்லை அதே போன்று மல்லிகா நிறுவனம் எரிக்கப்பட்டமை தொடர்பில் அது நாச கார வேலையா? அல்லது தற்செயல் நிகழ்வா? என்று அறிவதற்கான இரசாயணப் பகுப்பாய்வு அறிக்கையைக் கூட 2மாதங்களாகியும் வழங்காமல் இழுத்தடிக்கும் துர்ப்பாக்கியமே இன்னும் நிலவுகின்றது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இலங்கையைச் சேர்ந்த 32 முஸ்லிம்கள் ISIS அமைப்பில் இருப்பதாகவும் சில மாவட்டங்களில் உள்ள மத்ராசாக்களில் மதப்போதகர்கள் தீவிரவாதத்தை பரப்புவதாகவும் கூறி முஸ்லிம்களை புண்படுத்தினார்.

அடுத்த நாள் பாராளுமன்றத்தில் நான் உரையாற்றிய போது அவற்றை மறுத்து 'மனம்போன போக்கில் எழுந்த மானமாகவும் நீதியமைச்சர் பேச்கூடாதெனவும் அவ்வாறு இருந்தால் அவர்களின் விபரங்களை வெளியிட முடியுமா? எனக்கேட்டேன். நீதியமைச்சர் எந்தப்பாணியில் வந்தாரோ அதே பாணியில் உரிய பாஷையில் பதிலளித்தேன்.

முஸ்லிம்கள் ஏனைய இனங்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். எந்தக்காலத்திலும் நாம் ஆயுதம் ஏந்தவுமில்லை அதைப் பற்றி சிந்திக்கவுமில்லை அதில் நம்பிக்கை கொண்டு வாழவும் இல்லை. அல்லாஹ்வின் மீது மட்டுமே நாம் நம்பிக்கை கொண்டவர்க்ள். ஜனநாயத்தை மதிப்பவர்கள.; வாக்குரிமையை பயன்படுத்தி வாழவிரும்புபவர்கள் என்ற விடயங்களை நாம் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே அவர்கள் இருக்கின்றனர்.

முஸ்லிம்களுக்கெதிராக நடந்த, நடைபெற்று வருகின்ற கொடுரங்களையும் அதனால் முஸ்லிம் சமூகத்தின் மனக்குமுறல்களையும் நான் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த போது பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் உன்னிப்பாகவும் அமைதியாகவும் கேட்டுக்கொண்டிருந்ததை இந்த இடத்தில் நான் கூறியே ஆக வேண்டும். இது மட்டுமன்றி இந்த விடயங்களையும் எமது உள்ழக்குமுறல்களையும் நாங்கள் இந்தத் தலைவர்களிடம் பல தடவைகள் எத்தி வைத்திருக்கின்றோம்.

சமூகவலைத் தளங்களிலும் முகநூல்களிலும் இனவாதிகள் எம்மை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாமோ ஒருவரை ஒருவர் வசை பாடுவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் சமூகவலைத் தளங்களை பயன்படுத்தி காலத்தைக் அழித்து வருகின்றோம். இஸ்லாமிய வரையறைக்குள் நாம் வாழ்ந்து ஒற்றுமையை பேணுவதன் மூலமே எதிரிகளின் சவால்களை இலகுவில் முறியடிக்க முடியும். என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -