அகமட் எஸ்.முகைடீன்-
அம்பாறை மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் உரிய நடவடிக்கையினை எடுப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை மனித எழுச்சி நிறுவனத்தின் அனுசரணையில் (27) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று கவனயீர்ப்பு போராரட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச.எம்.எம்.ஹரீஸ் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டத்திலேதான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நம்புகின்றோம். ஆதலால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு இப்பிரச்சினையை கொண்டு சென்று இம்மக்களின் அவல நிலையினை நிவர்த்திக்கும்வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு இப்பிரச்சினை தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தியினையும் இதன்போது பிரதி அமைச்சர் வெளியிட்டார்.
இப்போராட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.