மினிப்பே நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தினால் திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது என மகாவலி அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
புதன்கிழமை (23) மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் மகாவலி தொடர்பான கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. அதன்போது மினிப்பே திட்டம் அமுல்படுத்தப்பட்டால் திருகோணமலை மாவட்டம் பாதிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகின்றது. எனவே இந்த விடயம் குறித்து விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று இம்ரான் எம்.பி கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி இந்த திட்டத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கு எந்தவொரு பாதிப்பும் வராது. எனவே விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. சிலர் அரசியல் நோக்கம் கருதி விவசாயிகள் மத்தியில் தேவையற்ற வதந்திகளைப் பரப்பியுள்ளதே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எந்த மாவட்டத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும். இதனால் விவசாயிகள் பெரும் நன்மைகளை அனுபவிப்பர் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக இம்ரான் எம்.பி மேலும் தெரிவித்தார்.