இலங்கையில் முஸ்லிம்களின் ஷரீஆ சட்டத்தை உடனடியாக ரத்துச்செய்து முஸ்லிம் விவகாரங்களை நாட்டின் பொதுச் சட்டத்தினுள் உள்வாங்குமாறு பெளத்த சங்க சபை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் எத்தனை பிரிவு மக்கள் இருந்தாலும் அனைவருக்கும் ஒரே சட்டமே அமுலிலிருக்க வேண்டும். இனரீதியான, மதரீதியிலான சட்டங்கள் நடைமுறையில் உள்ளதனாலே பிரச்சினைகள் உருவாகின்றன. இனங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பாடுகின்றன என்பதை அமைச்சரிடம் விளக்கியிருக்கிறோம்.
அத்தோடு முஸ்லிம்கள் எமது வரலாற்றுப் பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம்களால் கூரகல, முகுது மகா விகாரை, தெவன கல போன்ற பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களை மீட்டு பெளத்தர்களுக்கே வழங்கப்படவேண்டும்.
பெளத்தர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஐ.எஸ்.தீவிரவாதிகள் இலங்கையைத் தளமாகக் கொள்வதற்கு இடமளிக்கக் கூடாதெனவும், ஐ.எஸ்.உடன் தொடர்புபட்டுள்ள இஸ்லாமியர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டியுள்ளோம் என்றார்.jm