அம்பாறை மாவட்டம் வட்டமடு மேச்சல் தரை பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் தாம் அரசாங்க அதிபரினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையில் ஏற்பட்டுவரும் முருகல் நிலையினைத் தணிக்கும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அது இன்று வரை சாத்தியப்படவில்லை.
இந்த நிலையில் அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் வருகைதந்து தமக்கான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதாகத் தெரிவித்திருந்த போதிலும் அது நிகழவில்லை.
இதனையடுத்து வடகிழக்கு மாகாண சிங்கள அமைப்பின் தலைவர் சேனாதிபதியே அனந்த தேரர் அதன் செயலாளர் உகன சுமணரடத்தினகிமி ஆகியோரிடம் கால்நடை வளர்ப்பாளர்கள் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
அரசாங்க அதிபருக்கு வழங்க இருந்த மகஜரின் பிரதி ஒன்றையும் இவர்களிடம் கால்நடைவளர்ப்பாளர்கள் கையளித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரையாக 1976 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மேச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு கால்நடையாளர்கள் அதனுள் கால்நடைகளை வளர்த்துவந்தனர்.
பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்ததினால் கால்நடையாளர்கள் அங்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இதனை பயன்படுத்தி விவசாயிகள் காணிச் சட்டத்திற்கு முரணாக போலி தற்காலிக காணிப்பத்திரத்தை அரசியல் அதிகாரத்தினால் பெற்று காடுகளை அழித்து வேளாண்மை செய்கைகளை செய்துள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
athavannews