தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ மற்றும் சட்ட பீடங்களை உருவாக்கவும் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

அகமட் எஸ்.முகைடீன்-
கல சமூகங்களும் கல்வி கற்கும் தென்கிழக்குப் பல்கலைக்ககழகத்தை சகல பீடங்களையும் கொண்டமைந்த முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றும்வகையில் மருத்துவ மற்றும் சட்ட பீடங்களை உருவாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு தெரிவித்தார். தமதுரையில் மேலும் தெரிவிக்கையில். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்ககழகம் புகழ்பெற்ற சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்கிறது. இதற்கான சகல உதவியினையும் அமைச்சர் வழங்கிவருகின்றார். சகல சமூகத்தவர்களும் கல்வி கற்கும் இப்பல்கலைக்கழகத்தை சகல பீடங்களையும் கொண்ட முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து செயற்படுத்த வேண்டும். 

அந்தவகையில் வைத்திய மற்றும் சட்ட பீடங்களை அமைப்பதற்கான திட்டங்களை உருவாக்கி இப்போது இருந்தே செயற்படல் வேண்;டும். வைத்திய பீடத்தை உருவாக்குவதற்கு ஏற்றவகையில் இப்பிரதேசத்தில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக அம்பாறை பொது வைத்தியசாலை, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை என்பன அமந்துள்ளன. அத்தோடு பல்வேறு துறைசார்ந்த வைத்திய நிபுணர்களும் இப்பிரதேசத்தில் உள்ளனர். எனவே இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவ மற்றும் சட்ட பீடங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தார். 

அக்கரைப்பற்று நுரைச் சோலை வீட்டுத்திட்ட வீடுகள் உடன் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

சுனாமியினால் பாதிக்கப்பட்டு தமது வதிவிடங்களை இழந்த அம்பாறை மாவட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச் சோலையில் சவூதி அரசின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் இன்னும் பயானாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அவர்களுக்கான நிரந்தர வதிவிடமின்றி வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். 

நல்லாட்சி அரசில் அதற்கான தீர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இன்னும் அவ்வீடுகள் கையளிக்கப்பட்டதாக இல்லை. எனவே 11 வருடகாலமாக துன்பியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அவ்வீடுகளை உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொள்வதோடு, இச்சபையில் இருக்கின்ற சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு குறித்த விடயத்தைக் கொண்டு சென்று காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பிரிதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட உள்ளுர் வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும், கொழும்பு – கிழக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும்.

அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் உள்ள பல உள்ளுர் வீதிகள் இன்னும் புனரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் இப்பிரதேச மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே அம்பாறை மாவட்டத்தில் புனரமைக்கப்படாமல் உள்ள உள்ளுர் வீதிகளை புனரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை அரசு மேற்கொள்ள வேண்டும். 

நாட்டின் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி சம்பந்தமாக பெருந் திட்டங்களை நல்லாட்சி அரசு மேற்கொண்டு வருகின்றது. அதற்கமைவாக உள்ளுர் வீதிகளை புனரமைப்பதற்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பினும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே அம்பாறை மாவட்ட உள்ளுர் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை அமைச்சு எடுக்கும் என்று நம்புகின்றோம். 

நாட்டில் அதிவிஷேட பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் திகழ்கிறது. எனவே இம்மாகாணத்தின் பொருளாதார வளரச்சியை மேலும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக அதிவேக நெடுஞ்சாலை வீதி ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்தவகையில் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொலநறுவை மாவட்டத்தின் ஊடாக குறைந்தது வாழைச்சேனை வரையிலாவது அதிவேக நெடுஞ்சாலை வீதியினை அமைக்கும்படி கௌரவ அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்களிடம் வேண்டுகோள் வீடுகின்றேன். 

அம்பாறை மாவட்டத்தில் காரியாலயங்களை இடமாற்றும் நடவடிக்கை எதிர்காலத்திலும் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் (நைடா) அம்பாறை மாவட்டக் காரியாலயம் கல்முனையில் அமைந்துள்ளது. இதனை வேறு ஒரு பிரதேசத்திற்கு உடனடியாக மாற்றும்படி மாவட்ட காரியாலய முகாமையாளருக்கு நைடா பணிப்பாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இதனை கௌரவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களின் கவனத்திற்க கொண்டுசென்றபோது அக்காரியாலயம் தொடர்ந்தும் கல்முனையில் இயங்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுத்திருந்தார், அதற்காக இந்த இடத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு காரியாலயங்களை இடமாற்றும் செயற்பாடுகள் தொடர்ந்தும் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுதலாகும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -