எம்.ரீ.ஹைதர் அலி-
வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட காரமுனை கிராமத்தின் பிரதான வீதியில் தெரு மின்விளக்குகள் இல்லாமையினால் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் விச ஜந்துக்களின் இன்னல்களுக்கும் காட்டு யானைகளின் அட்டகாசங்களுக்கும் முகம்கொடுத்து வந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ். இந்திரகுமார் அவர்களிடம் இக்கிராத்திலுள்ள மக்களின் நலன்கருதி அவசியத்தேவைப்பாடாகவுள்ள இடங்களை இனங்கண்டு அவ்வீதியில் தெரு மின்விளக்குகளை இடுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைவாக 2016.12.31ஆந்திகதி - சனிக்கிழமை பிரதேச சபையினால் அடையாளம் காணப்பட்ட காரமுனை கிராமத்தின் பிரதான வீதியிலுள்ள சில இடங்களுக்கு தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கான மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து முதலாவது மின்சார இணைப்பினை 2016.11.25ஆந்திகதி - வெள்ளிக்கிழமை பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பெற்று கொடுத்தபோது காரமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் சார்பாக பிரதான வீதியில் அடையாளங் காணக்கூடிய இடங்களுக்கு தெரு மின்விளக்குகளை பெற்றுத்தருமாறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பள்ளிவாசல் நிருவாகசபை சார்பாக எஸ். நளீம் அவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
காரமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் நிருவாக சபையின் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையான தெரு மின்விளக்குகளை இட்டமைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ். இந்திரகுமார் ஆகியோருக்கு காரமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகசபை மற்றும் அங்குள்ள பொதுமக்கள் ஆகியோரும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.