இதேபோல் அலுவகத்தின் இடது புறம் தொண்டர்கள் உட்காருவதற்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற உடன் கட்சியினர் மத்தியில் சசிகலா உரையாற்றுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவெளியில் சசிகலாவின் முதல் உரை என்பதால் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று பொறுப்பேற்க உள்ளதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற சசிகலா கண்ணீர் விட்டபடி அஞ்சலி செலுத்தினார். மேலும் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட தீர்மானத்தையும் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து அவர் ஆசி பெற்றார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் அருகே 3 கிராமங்களில் அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டுள்ளன. சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் அதிமுக கிளை கழகத்தையும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையும் நிர்வாகிகள் கலைத்தனர். மேலும் கட்சி கோடி கம்பத்தையும் அவர்கள் சாய்த்தனர். இதேபோல் ஒருசில இடங்களில் அதிமுக கொடியை கம்பத்தில் இருந்து அக்கட்சியினர் இறக்கினர். அப்போது சசிகலாவை விமர்சித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பொதுச்செயலாளர் ஆக தலைமையேற்க ஆதரவு தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பாடாலூர் உள்ளிட்ட கிராமங்களில் தீபாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் பேனர்கள் வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சசிகலா உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவை பொதுச்செயலாளர் ஆக நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.தினகரன்