எம்.வை.அமீர் -
கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் உள்ள தோணா பாலத்துக்கு அருகில் இரவு மற்றும் பகல் நேரங்களில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகரசபை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவ்வாறு கட்டாக் காலியாக, கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரியும் மாடுகளாலும் வீதியின் நடுவே படுத்துறங்கும் மாடுகளினாலும் விபத்துச் சம்பவங்களும் ஏற்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேவேளை, நாகரீகம் தெரியாதோரால் வீசப்படும் வீட்டுக்களிவுகளை கட்டாக்காலி மாடுகள் கிளறி வீதியெங்கும் போடுவதாகவும் வீட்டுத்தோட்டப் பயிர்களையும் நாசம் செய்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் சம்பந்தமாக இறுக்கமான சட்டங்கள் இருக்கின்ற போதிலும் கல்முனை மாநகரசபை நடவடிக்கையெடுக்க வில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது சாய்ந்தமருது தோணா அபிவிருத்தித் திட்ட பணிகள் இடம்பெறும் இவ்வேளையில் வைத்தியசாலை வீதியில் உள்ள தோணா பாலத்துக்கு அருகில் கழிவுகள் தொடர்ந்தும் வீசப்பட்டுவருவது குறித்த பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மிகுந்த இடைஞ்சலாக இருப்பதும் கவலையளிக்கும் விடயமாகும்.
பலகோடி ரூபாய்கள் செலவில் முன்னெடுக்கப்படும் இவ் அபிவிருத்தித் திட்டத்தின் உச்ச பலனை சாய்ந்தமருது மக்கள் அனுபவிக்க வேண்டுமானால் வீதிகளில் நின்றுகொண்டு விமர்சிக்காது, இங்கு கழிவுகளை வீசுபவர்கள் விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கல்முனை மாநகரசபை இவர்களுக்கு எதிராகவும் உச்ச சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்தில் கழிவுகளை சிலர் வீசுவதற்குக் காரணம் தொடர்பாக வினவியபோது அந்த இடத்தில் போடும் கழிவுகளை மட்டுமே கல்முனை மாநகரசபை அகற்றுவதாகவும் இதுவரையும் கழிவுகளை அகற்றக்கூடிய சிறந்த பொறிமுறையை அவர்கள் கையாளவில்லை என்றும் சில பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுவதற்கு வாகனங்கள் வருவதில்லை என்றும் இன்னும் சில வீதிகளில் கழிவுகளை அள்ளிக்கொண்டு வரும்போது இடையில் வாகனம் நிறைந்துவிடுவதால் பின்னால் உள்ள கழிவுகள் அள்ளப்படுவதில்லை என்றும் விசனம் தெரிவிக்கப்பட்டது.
கல்முனை மாநகர ஆணையாளரே! சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் உள்ள தோணா பாலத்துக்கு அருகில் குவியும் கழிவுகளை அவ்விடத்தில் போடாது விடுவதற்கான பொறிமுறை இனியாவது ஏட்படுத்துக.. அங்கு குழுமும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்குக... சுகாதாரத்துறை சார்ந்தோரே! டெங்கு நுளம்பு 300மீற்றருக்கு மேல் பறந்துவந்து தனது கைவரிசையைக் காட்டக்கூடியது என்பதையும் பள்ளிவாசல்களின் நிருவாகிகளே! சுத்தாம் ஈமானின் பாதி என்ற விடயத்தையும் நகரீகமில்லாது நாகரீகமற்ற கழிவுகளை வீசுவோர்களுக்கு எத்திவையுங்கள் என்றும் தோணாவின் அருகில் வாழும் மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.