மீள்குடியேறிய முஸ்லிம் மக்களை மைத்திரி பால கடலில் பாயவா சொல்கின்றார்?

மன்னார் பிரஜைகள் அமைப்பு கேள்வி
ன்னார் முசலிப் பிரதேத்தில் முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமங்களை வனஜீவராசிகள் வலயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனப்படுத்தியன் மூலம், அங்கு வாழும் முஸ்லிம்களை வெளியேறிச் சென்று கடலில் பாய்ந்து கொள்ள வேண்டுமென்றா சொல்கின்றார் என்று மன்னார் பிரஜைகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 

மைத்திரியை ஜனாதிபதியாக்க இலங்கைவாழ் முஸ்லிம்கள் பட்டபாடுகளையும், கஷ்டங்களையும் மறந்து அவர் இப்போது நன்றி கெட்டதனமாக செயற்படுகின்றார்.புத்தளத்தில் அகதியாகவிருந்த முஸ்லிம்கள் மைத்திரிக்கு வாக்களிப்பதற்காக மன்னாரிற்கு வந்து, அங்கு தங்கியிருந்து பல மைல் தூரம் நடந்து சென்று அவருக்கு புள்ளடி போட்டு வெற்றிபெறச் செய்தது தங்களது தலையில் மண்ணையை அள்ளிக் கொட்டவா? 

மஹிந்த அரசின் பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தலையும், அடாவடித்தனங்களையும் கெடுபிடிகளையும் மீறி அவற்றை துச்சமென எண்ணி முகம் தெரியாத, எங்கேயோ இருந்த இந்த மைத்திரியை ஜனாதிபதியாக்கியதற்கு அவர் செய்யும் நன்றிக் கடன் இதுதானா?ஜனாதிபதி தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் இனிப்பான கதைகளைக் கூறினார். சகல இனங்களையும் சமத்துவமாகவும், நீதியாகவும் நடத்துவதாக வாக்குறுதியளித்த இந்த மைத்திரி இப்போது இனவாதிகளின் மகுடிக்கேற்றவாறு ஆடத் தொடங்கியிருக்கின்றார். அவரது அமைச்சரவையிலுள்ள சில கடும்போக்கு அமைச்சர்களையும் முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிட்டு இப்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றத் தொடங்கியுள்ளார். முஸ்லிம்களின் பரம விரோதியான ஞானசார தேரரையும், ஆனந்த தேரரையும், அவர்களுடன் ஒட்டியிருக்கும் குட்டி இனவாத விஷப் பாம்புகளையும் தனது வேட்டிக்குள்ளே மறைத்து வைத்து அரவணைத்து வருகிறார். இந்த நச்சுப்பாம்புகளுக்கு பால்வார்க்கும் மைத்திரி முஸ்லிம்களை மேலும் மேலும் புண்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது துரோகத்தனமாகும். வடக்குக் கிழக்கில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாழ்விடங்கள் பலவற்றை சிங்களவர்களின் புராதன இடங்களாகவும், வரலாற்று வாழ்வியல் தடயங்களாகவும் பிரகடனப்படுத்துவதாக அன்மையில் கதையளந்துள்ள நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரி இப்போது ஒருபடி மேலே சென்று வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார்.

புலிகளால் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்களாக அகதி முகாமில் இன்னும் கஷ்டப்பட்டுவரும் முஸ்லிம்கள் மீண்டும் சிறிய மூச்சுவிடத் தொடங்கும் போது, இவரது புதிய ஜீவராசி அறிவிப்பால் அகதி மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மனிதர்களுக்கு காட்டாத இரக்கத்தை இப்போது மிருகங்களுக்கு காட்ட தொடங்கியுள்ளார் இந்த ஜனாதிபதி. இதுதான் அவரது மித்திரத் தன்மையா என நொந்து போயிருக்கும் மக்கள் கேட்கின்றனர்? நல்லாட்சியை நோக்கிய பயணமா இது? அல்லது நரக ஆட்சியை நோக்கிய பயணமா இது என்றும் இந்த மக்கள் இன்று கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை தொடருமயிருந்தால் நல்லாட்சிக்கு மண்ணள்ளிப்போட முஸ்லிம்கள் தயாராகுவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும். இவ்வாறு இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -